ஒவ்வொரு இனங்களின் அவசியத்திற்கும் ஏற்றாட்போல் பொலிஸாரை நியமிக்க முடியாது - பொலிஸ்மா அதிபர்
(ADT) ஒவ்வொரு இனங்களின் அவசியத்திற்கும் ஏற்றாட்போல் இலங்கையினுள் பொலிஸாரை நியமிக்க முடியாது என பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்ககோன் தெரிவித்தார்.
இந்த நாட்டின் சகல மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு பொலிஸ் துறையின் கீழ் அனைத்து பொலிஸாரும் செயற்படுவதாக பொலிஸ்மா அதிபர் அத தெரணவிற்கு தெரிவித்தார்.
வடக்கிற்கான பொலிஸ் அதிகாரம் குறித்து, வடமாகாண சபையின் முதல் அமர்வு கைதடியில் உள்ள மாகாண சபைக் கட்டடத்தில் நடைபெற்ற போது வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் Ad பொலிஸ்மா அதிபரை வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் அவசியமான தமிழ்ப் பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு பொலிஸ் நிலையத்தில் மூன்று, நான்கு தமிழ்ப் பொலிஸார் சேவையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
விக்னேஸ்வரன் அவ்வாறு குறிப்பிடுவதற்கு முன்னதாகவே மொழிப் பிரச்சினை தொடர்பில் நாம் அறிந்து கொண்டு பொலிஸில் தமிழ் தெரிந்தவர்களை அதிகமாக இணைத்துக் கொண்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
இதன்படி பொலிஸ் திணைக்களத்தின் நடவடிக்கைகளை இலகுபடுத்திக் கொள்வதற்காக 2,000 வரையான தமிழ் தெரிந்த பொலிஸார் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்ககோன் மேலும் தெரிவித்தார்.

Post a Comment