சவுதி அரேபியாவில் 'மெர்ஸ்' நோய்க்கு 83 வயது மூதாட்டி மரணம்
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் வேகமாக பரவி வரும் 'மெர்ஸ்' நோய்க்கு சவுதி அரேபியாவை சேர்ந்த 83 வயது மூதாட்டி நேற்று பலியானார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிய கண்டத்தில் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான உயிர்களை பறித்துச் சென்ற 'சார்ஸ்' கிருமிக்கு இணையான 'மெர்ஸ்' கிருமியின் தாக்குதலால் இந்த மர்ம நோய் வருவதாக கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டாலும் இதற்கான மாற்று மருந்தோ, தடுப்பு மருந்தோ இதவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனையடுத்து, இந்த ஆண்டு சவுதி அரேபியாவிற்கு வரும் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை சரிபாதியாக குறைத்து அரசு அனுமதியளித்தது. நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் 'மெர்ஸ்' மர்ம நோய் தொடர்பாக நடத்திய ஆராய்ச்சியில் ஓமன் நாட்டில் உள்ள சிலவகை ஒட்டகங்களின் மூலம் இந்நோய் பரவியிருக்கலாம் என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த கிருமியின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மரணத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது என்ற நிலையில் சவுதி அரேபியாவில் 'மெர்ஸ்' நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 124 பேர் இந்த மர்ம நோயின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

Post a Comment