சர்வதேச தாய்ப்பால் வாரம்
தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை, தாய்மார்களுக்கு உணர்த்தும் விதமாக ஆகஸ்ட் முதல் வாரம் சர்வதேச தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவது குறித்த விழிப்புணர்வு குறைந்து வருவதால், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இவ்வாறான கொண்டாட்டங்களின் மூலம், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்கின்றன. மேலைநாடுகளின் பெரும்பாலான பெண்கள், குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர விரும்புவதில்லை என்பது வேதனைக்குரியது. குழந்தைக்கு தாய்ப்பால் தருவது, தாயின் உடல்நலனுக்கு உகந்தது என்பதே உண்மை. குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க தொடங்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக, முதல் முறை கொடுக்கப்படும் பால், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது. குழந்தைக்கு தேவையான புரதங்களும் அதில் தான் அடங்கியுள்ளன. குழந்தை பிறந்தது முதல், ஆறு மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் எனவும், குழந்தையின் உடல்நிலையை பொறுத்து, 2 வயது வரை தாய்ப்பால் வழங்க வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.
நன்மை அதிகம்:
தாய்ப்பால் கொடுக்கப்படாத குழந்தைகள், நோய்வாய்ப்படும் வாய்ப்பு அதிகம். குழந்தை மரணங்களும் தாய்ப்பால் தருவதால் தவிர்க்கப்படுகிறது. ஒவ்வாமை, காதுகளில் ஏற்படும் தொற்று போன்றவற்றிலிருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. குழந்தைகளின் பற்கள், நாக்கு உட்பட பேச பயன்படும் உறுப்புகள் வேகமாக வளர்ச்சியடைய தாய்ப்பால் தருவது அவசியம். குழந்தைக்கும், தாய்க்கும் இடையேயான பிணைப்பு தாய்பால் தருவதன் மூலம் அதிகரிக்கிறது.

Post a Comment