சவால் விடுக்கும் கோத்தா
இலங்கையின் போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், காணாமற்போனதாகவும், சுமத்தப்படும் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஐ.நாவுக்கு சவால் விடுத்துள்ளார்.
படையினர் மீது போர்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் ஐ.நாவும் ஏனைய தரப்பினரும் அதற்கான அடிப்படை ஆதாரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தமாத இறுதியில் இலங்கைக்கு வரும் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம், அரசாங்கம் இந்த விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்பவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐ.நா பொதுச்செயலர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஆதாரமாக அமைந்த தரவுகளை தாமதமின்றி வெளியிடுமாறும் அவர் கோரியுள்ளார்.
அறிக்கையின் மூலங்களின் பெயர்களை வெளியிட மறுப்பதால், நிபுணர்குழு அறிக்கை, நீதிமன்றத்தினாலோ அல்லது சிறப்பு விசாரணை பொறிமுறையினாலோ ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“வடக்கில் அரசாங்கம் மேற்கொண்ட கணிப்பீட்டின்படி, மோதலின் இறுதிக்கட்டத்தில், 7400 பேர் கொல்லப்பட்டதாகவும், 2600 பேர் காணாமற்போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்ட 7400 பேரில், விடுதலைப் புலிகளுக்காக சண்டையிட்டு மரணமானவர்களும் உள்ளடங்கியுள்ளனர்.
காணாமற்போன 2600 பேரில், 1600 பேர் விடுதலைப் புலிகளுடன் இருந்தவர்கள்.
438 பேர் மட்டுமே, இராணுவக்கட்டுப்பாட்டில் காணாமற்போயுள்ளனர்.
இவற்றில் 28 காணாமற்போன சம்பவங்கள் குறித்தே படையினர் மீது நேரடியாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment