Header Ads



அக்கரைப்பற்று சம்புக்களப்பு வடிச்சல் பிரச்சினை தீர்கப்படுமா..?

(ஏ.எல்.ஜுனைதீன்)
  அக்கரைப்பற்று சம்புக்களப்பு வடிச்சல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமைச்சராக நான் இருந்த போது கொரியா நாட்டு பொறியியலாளர்களின் உதவியுடன் இத் திட்டம் தொடர்பாக சாத்திய வள அறிக்கை ஒன்றை தயாரித்திருந்தோம்.அதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை விவசாயிகளின் அவலத்தைப் போக்கி அவர்களின் வயல் காணிகளைக் காப்பாற்றமுடியும் என முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் தெரிவிக்கின்றார்.

   இத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கென அன்று மறைந்த மர்ஹும் எம் ஐ. அஹமட்லெவ்வை (ஏ.டி ) எனக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டார். தற்போது மொனராகலையில் நீர்ப்பாசனப் பணிப்பாளராக கடமை புரியும் பொறியியலாளர் எஸ்.எல்.எம்.அலியார் அன்று அம்பாறை மாவட்ட நீர்ப்பாசன மேலதிகப் பணிப்பாளராகக் கடமையாற்றும் போது இத்திட்டம் தொடர்பான சாத்திய வள அறிக்கை தயாரிப்பதற்குப் பாடுபட்டார். எனவே  அந்த சாத்திய வள அறிக்கையின்படி அக்கரைப்பற்று சம்புக்களப்பு வடிச்சல் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்று முன்னாள் அமைச்சர் மன்சூர் கூறுகின்றார்.

  அக்கரைப்பற்று சம்புக்களப்பு வடிச்சல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கானத் திட்டம் குறித்து பொறியியலாளர் எஸ்.எல்.எம்.அலியாரிடம் வினவியபோது அவர் தெரிவித்ததாவது,

  கல்லோயா அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இப்படி ஒரு பிரச்சினை இங்குள்ள விவசாயிகளுக்கு இருக்கவில்லை. இத்திட்டம் ஆரம்பித்த பின்னர்தான் அக்கரைப்பற்று சம்புக்களப்பு வடிச்சல், கல்முனை கரைவாகு வடிச்சல் என்பன ஏற்பட்டு இப் பிரதேசங்களிலுள்ள விவசாயிகளுக்கு தமது வயல் காணிகளில் விவசாயம் செய்ய முடியாத ஒரு நிர்க்கதியான நிலை ஏற்பட்டது.

  கல்முனை கரைவாகு வடிச்சல் பிரச்சினைக்கு தாழ்வான பகுதியிலுள்ள நீரை பம்மிங் செய்து வெளியேற்றுவதன் மூலம் தீர்வு கண்டிருக்கின்றோம். அதே போன்று அக்கரைப்பற்று சம்புக்களப்பு வடிச்சல் பிரதேசத்திலும் சில பகுதிகள் கடல் மட்டத்தை விட தாழ்வான பிரதேசமாகவும் சில பகுதிகள் உயரமான பிரதேசமாகவும் காணப்படுகின்றன. தாழ்வான பிரதேசத்திலுள்ள நீரை பம்மிங் செய்து இறுதியாக சின்னமுகத்துவாரத்தில் பம்மிங் நிலையம் ஒன்றை ஏற்படுத்தி நீரை வெளியேற்றுவதன் மூலம் தீர்வு காணமுடியும் என்றார்.

1 comment:

  1. ஐயா மன்சூர் அவர்களே உங்களைப்போன்ற கனவான்கள் ஒதுங்கி விட்டதால் நமது சமூகம் இப்போது அனாதையாகி விட்டது.

    ReplyDelete

Powered by Blogger.