Header Ads



மன்னார் மாவட்டத்தில் முதற் தடவையாக 2 முஸ்லிம் தேசிய பாடசாலைகள்

(எம்.எம்.ஏ. ஸமட்)

மன்னார் மாவட்டத்தில் முதற் தடவையாக தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்தப்பட்டுள்ள இரு முஸ்லிம் பாடசாலைகளையும்  தேசிய பாடசாலைகளாக பாடசாலை நிர்வாகத்திடம் விரைவில் கல்வி அமைச்சினால் கையளிக்கப்படும் என கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் இஸட். தாஜுடீன் தெரிவித்தார்.

அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பிரகாரம் கடந்த ஜுலை மாதம் 29ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் வட மாகாணத்தில் நான்கு தமிழ் பாடசாலைகள், 2 முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் ஒரு சிஙகளப் பாடசாலை உட்பட 7 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக கல்வி அமைச்சினால் தரமுயர்த்தப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம், மன்னார் மாவட்டத்திலுள்ள சிலாவத்துறை முசளி மத்திய மகா வித்தியாலயமும் மன்னர் அல்-அஷ்ஹர் மகா வித்தியாலயமும் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் இதுவரை தேசிய பாடசாலைகளாக எந்தவொரு பாடசாலையும் தரமுயர்த்தப்படவில்லையெனவும் இவ்விரு பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளமை இதுவே முதற் தடவை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இரு பாடசாலைகளையும் தேசிய பாடசாலைகளாக பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கும் வைபவம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதாகவும் இதில் கல்வி  அமைச்சர் பந்துல குணவர்தன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இப்பாடசாலைகளை பாடசாலை நிர்வாகத்திடம் தேசிய பாடசாலைகளாகக் கையளிக்கவுள்ளதாகவும்  பணிப்பாளர் தாஜுடீன் மேலும் குறிப்பிட்டார்

இதேவேளை, நாடு பூராகவும், உள்ள ஏறக்குறை 9600 பாடசாலைகளில் 343 தேசிய பாடசாலைகள் உள்ளன. அவற்றில் 43 தேசிய பாடசாலைகள் முஸ்லிம் தேசிய பாடசாலைகளாகும். தற்போது வட மாகாணத்தில் தரமுயர்த்தப்பட்டுள்ள 7 தேசிய பாடசாலைகளையும் சேர்த்து தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை 350ஆக அதிகாரித்துள்ளதுடன் முஸ்லிம் தேசிய பாடசாலைகளின் தொகை 45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.