புனித ரமழான் மாதத்தில் யுத்தத்தை நிறுத்துங்கள் - சிரியாவிடம் கோரிக்கை
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சியை எதிர்த்து கடந்த இரண்டு வருடங்களாக போராட்டம் நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் உடைமைகளை இழந்து அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஆயினும் தாக்குதல்கள் தீவிரம் அடைந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் இஸ்லாமியர்களின் புனித நாளான ரம்ஜான் நோன்பு புதன்கிழமை தொடங்கியது. இந்தப் புனிதமான மாதத்தில் போர் நிறுத்தம் செய்ய துருக்கி அரசும், ஈரான் அரசும் இணைந்து சிரியாவை கேட்டுக் கொண்டுள்ளன.
துருக்கியின் தலைநகரான அங்காராவில் நேற்று இந்த அறிவிப்பு வெளியானது. துருக்கியின் வெளியுறவுத்துறை மந்திரி அஹமத் டவுடோகுலுவும், ஈரானின் வெளியுறவுத் துறை மந்திரி அலி அக்பர் சலேஹியும் இணைந்து இந்தக் வேண்டுகோளை விடுத்துள்ளனர். ஈரான் சிரியாவின் அதிபர் ஆசாத்தின் நட்பு நாடாகும்.
ஆனால், துருக்கி போராளிகளுக்கு ஆதரவாக இருப்பதோடு சிரியாவை எதிர்த்துப் போராடும் புரட்சியாளர்களுக்கும் உதவி புரிகின்றது. எனினும் சிரியா அரசும், புரட்சியாளர்களும் இணைந்து இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஈடுபடவேண்டும் என்று இரண்டு நாட்டு மந்திரிகளும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Post a Comment