மொஹமட் முர்சி நலமாக உள்ளார் - ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி அறிவிப்பு
(Tn) ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கைகளுக்கான தலைவர் கதரின் அஷ்டன் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சியை சந்தித்துள்ளார். அவர் நலமுடன் இருப்பதாக கூறிய அஷ்டன், அவர் எங்கே தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார் என்ற விபரத்தை வெளியிட மறுத்தார்.
அஷ்டன் கடந்த திங்கட்கிழமை முர்சியுடன் இரண்டு மணிநேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அஷ்டன் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். ஆனால் முர்சி தம்மிடம் என்ன கூறினார் என்பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். ‘அவரது வாயிலிருந்து வெளியான வார்த்தைகளை நான் கூறப்போவதில்லை’ என அஷ்டன் கூறினார்.
எனினும் முர்சி, தொலைக்காட்சி, பத்திரிகைகளை பார்த்து தற்போதைய நிலவரத்தை அறிந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார் என விபரித்தார்.
கடந்த ஜுலை 3 ஆம் திகதி இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சிக்கு பின் இராணுவத்தால் முர்சி ரகசியமான இடத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
பதவி கவிழ்க்கப்பட்ட பின் முர்சியை சந்தித்த முதலாவது வெளித்தரப்பு அதிகாரியாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு பிரதானி அஷ்டன் பதிவாளார். இதில் அஷ்டன் திங்கட்கிழமை மாலை இராணுவ ஹெலிகொப்டர் மூலம் முர்சி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
எனினும் நான் அவருக்கு மேலும் ஒரு விடயத்தை பற்றி கூறினேன். அது நான் அவரது கருத்தை பிரதி நிதித்துவப்படுத்தப்போவதில்லை என்றேன். ஏனென்றால் தற்போதைய சூழலில் அவரால் எனக்கு விளக்கம் கூற முடியாது என்றும் அஷ்டன் குறிப்பிட்டார்.

Post a Comment