Header Ads



அஞ்சல் திணைக்கள சுற்றுநிருபங்கள் தமிழ் மொழியில் இல்லையென கவலை

(எஸ்.அஷ்ரப்கான்)

அஞ்சல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் சுற்றுநிருபங்கள் தமிழ் மொழியில் கிடைக்கப் பெறாமல் சிங்கள மொழியில் மாத்திரம் கிடைக்கப் பெறுவதால் தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்ட தமிழ் பேசும் அஞ்சல் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர் என  அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கம் அரச கரும மொழிகள் ஆணைக்குழு செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கம் சார்பாக அதன் பொதுச்செயலாளர் யூ.எல்.எம். பைஸர் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள அம்மகஜரில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் அதிலும் உப அஞ்சல் அதிபர்கள் சிங்கள மொழியை விளங்கிக் கொள்வதற்காக சிங்களம் தெரிந்த இன்னொருவரின் உதவியை நாடவேண்டியுள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பின்படி சிங்களமும் தமிழும் அரச கரும மொழியாக உள்ளது. அரச திணைக்களங்களினால் வெளியிடப்படும் சகல சுற்று நிருபங்களும் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்பது இதன் தாரக மந்திரமாகும். அரச கரும மொழிகள் ஆணைக்குழு தாபிக்கப்பட்டதன் பின்னர் சகல திணைக்களங்களுக்கும் இது தொடர்பான அறிவுறுத்தல் தெளிவாக வழங்கப்பட்டிருப்பினும் தமிழ் மொழி புறக்கணிப்பானது அஞ்சல் திணைக்களத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இது தொடர்பாக எமது சங்கத்தினால் அஞ்சல் மா அதிபருக்கு பல முறை அறிவித்துள்ளோம். இருப்பினும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை.

எனவே, இது தொடர்பாக கவனம் செலுத்தி அஞ்சல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் சுற்றுநிருபங்கள் இனிமேலாவது தமிழ் மொழியிலும் வெளியிடப்பட ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றுமுள்ளது.

No comments

Powered by Blogger.