மக்கள் பாதுகாப்புக்கு ஆபத்தான கூகுள்..!
கூகுளுக்கு இது போதாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும். கூகுள் நிறுவனம், பிரைவசி பாலிசியில் மிகவும் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என பல நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. ஏற்கனவே சர்வர் அமைப்பது தொடர்பாகவும், தங்களது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வர வேண்டும் என்றும் கூகுள் நிறுவனத்துக்கு சீன அரசு கடும் எச்சரிக்கை விடுத்தது. தகவல் பாதுகாப்பு விதிகளை 3 மாதங்களுக்குள் அமல்படுத்தாவிட்டால் ரூ.117 கோடியை அபராதமாக செலுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அரசும் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், கூகுள் நிறுவன ஊழியர்கள் எர்த் என்ற சேவைக்காக உலகம் முழுவதும் கேமராவும் கையுமாக அலைகின்றனர். எல்லா இடங்களையும் படம் பிடிக்கின்றனர். அவற்றை கூகுள் எர்த் மூலம் முப்பரிமாண முறையில் வழங்கி வருகிறது. இதனால், உலகின் எந்த இடத்தையும் மிக துல்லியமாக பார்க்க முடியும். நடை பாதை வரை கூட எர்த் சேவையில் பார்க்க முடியும். இந்நிலையில் இங்கிலாந்தின் தெருக்கள், வீடுகள், கட்டிடங்கள் ஆகிய அனைத்தையும் கூகுள் புகைப்பட குழு படம் எடுத்து தள்ளி வருகிறது.
இதனால் ஏராளமான தனிப்பட்ட வீடுகளின் புகைப்படங்களை அவை சட்டவிரோதமாக பதிவு செய்து வருகிறது என இங்கிலாந்து அரசுக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதையடுத்து கூகுள் நிறுவனத்தின் நடவடிக்கை தனி மனித பாதுகாப்புக்கும், உரிமைகளுக்கும் ஆபத்தானது. சட்ட விதிகளை மீறிய செயல் என்று இங்கிலாந்து கண்டித்துள்ளது. எனவே தங்கள் நாட்டில் எடுக்கப்பட்ட வீடு, கட்டிடங்கள் உள்பட எல்லா புகைப்படங்களையும் கூகுள் தனது சேமிப்பில் இருந்து அழித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இங்கிலாந்து அரசு கூறியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Post a Comment