இரத்த கண்ணீர் வடிக்கும் பெண் (படம்)
சிலி நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தினமும் 3 முறை ரத்த கண்ணீர் வடித்து வருகிறார். ஒரு மாதமாக இது நடக்கிறது. என்ன சிகிச்சை அளித்தாலும் ரத்தம் நிற்காததால் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிலி நாட்டின் லாஸ் லாகோஸ் மாகாணம் புராங்க் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் ஒலிவா, கார்பென்டர். இவரது மகள் யாரிட்ஷா ஒலிவா (20). ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். யாரிட்ஷா ஒலிவா இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒரு நாள் அழுத போது கண்ணில் இருந்து ரத்தம் வந்தது. ஒரு மாதமாக தினமும் 3 முறை கண்களில் இருந்து கண்ணீருக்கு பதில் ரத்தம் வருகிறது. இதனால் ஒலிவாவுக்கு பயங்கர வலி ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அருகில் உள்ள கண் டாக்டரிடம் மகளை அழைத்து சென்றனர்.
ஒலிவாவுக்கு முதலில் கண்ணில் போடுவதற்காக சொட்டு மருந்து கொடுத்தனர். ஆனால், மருந்து போட்டும் ஒலிவாவுக்கு வலியும் குறையவில்லை, ரத்த கண்ணீர் வருவதும் நிற்கவில்லை. அதன்பிறகு பல கண் டாக்டர்களிடம் ஒலிவாவை பெற்றோர் அழைத்து சென்றனர். ஆனால், டாக்டர்களால் ஒலிவாவின் பிரச்னையை சரிசெய்ய முடியவில்லை. ஹெமோலாக்ரியா என்ற அரிய நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து யாரிட்ஷா கூறுகையில், எனக்கு என்ன சிகிச்சை அளிப்பது என்று யாருக்கும் தெரியவில்லை, ஏன் இப்படி நடக்கிறது, நான் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை என்று பீதியுடன் கூறுகிறார். மகளின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன். நல்ல மனம் படைத்தவர்கள் உதவி செய்யுங்கள் என்று ஜோஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2009ல் இதேபோல் ஹெமோலாக்ரியா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் அழுத போதும் கண்ணில் இருந்து ரத்தம் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment