அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க முடியாது - ரவூப் ஹக்கீம் அதிரடி
அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க முடியாது என்பதாலேயே அந்த நாடு வழங்கிய நிதியுதவியை இலங்கை நிராகரித்ததாக, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிகாரிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வரமுடியாது போனதால், நீதித்துறை மறுசீரமைப்புத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட 450 மில்லியன் ரூபா நிதியுதவியை விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா கூறியிருந்தது.
இதுகுறித்து இந்திய ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ள, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்,
“நிதியுதவியுடன் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதாலேயே அது நிராகரிக்கப்பட்டதாக கூறியுள்ளார். நன்கொடைக்கான நிபந்தனைகள் ஒரு இறைமையுள்ள நாடு என்ற எமது நிலைக்கு ஏற்றதாக இருக்கவில்லை.” என்றும் அவர் கூறியுள்ளார்.
அந்த நிபந்தனைகள் குறித்து வினவியபோது, “இதற்கு மேல் என்னால் சொல்ல முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, இந்த நன்கொடை நிதியைப் பயன்படுத்தும் குழுவின் தலைவராக தலைமை நீதியரசர் மொகான் பீரிஸ் இருப்பதே, இந்த சர்ச்சைக்குக் காரணம் என்று கொழும்பில் இருந்து வெளியாகும் நாளிதழ், பெயர் வெளியிடப்படாத அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி DM தகவல் வெளியிட்டுள்ளது.
தலைமை நீதியரசர் மொகான் பீரிசின் நியமனத்தை தாம் அங்கீகரிக்கவில்லை என்பதால், அவர் அந்தக் குழுவின் தலைவராக இருப்பதற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
ஆனால், மொகான் பீரிசே தலைவராக இருக்க வேண்டும் என்று இலங்கை வலியுறுத்தியுள்ளது.
ஒரு இறைமையுள்ள நாடு என்ற வகையில் அமெரிக்காவின் இந்த எதிர்ப்பு ஏற்றுக் கொள்ள முடியாது என்று இலங்கை கருதுவதாகவும் கொழும்பு DM தெரிவித்துள்ளது.

இறையாண்மை என்பது வெளிநாட்டுக்கு மட்டும் உரித்தானது அல்ல எம்நாட்டுக்கும் தான் என்பதை நீதி அமைச்சர் மறந்தது ஏனோ?
ReplyDelete