மனிதர்களின் காச நோயை கண்டுபிடிக்கும் எலி
உலக அளவில் 9 மில்லியன் மக்கள் காசநோய் (டி.பி) தொற்றுக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 1.4 மில்லியன் மக்கள் டி.பி நோயால் இறக்கின்றனர். உலகில் எச்.ஐ.வி. கிருமிக்கு அடுத்தபடியாக, டி.பி கிருமி அதிக அளவில் பரவுகிறது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவிலும் இந்நோய் தொற்று அதிகமாக பரவியது. இதையடுத்து அங்கு நோய் கிருமியை கண்டுபிடிக்க மருத்துவத்துறையினர் நூதன முயற்சி மேற்கொண்டனர். இதற்காக பிரத்யேகமாக ஒரு ஆய்வுக்கூடம் அமைத்து, பெரிய வகை எலிகளைக் கொண்டு ஒருவருக்கு டி.பி பாக்டீரியா தொற்று உள்ளதா என்பதை கண்டறிகின்றனர்.
டி.பி தொற்று இருப்பதை கண்டறிய எலிகளுக்கு மருத்துவ விஞ்ஞானிகள் சிறப்பு பயிற்சி அளித்துள்ளனர். டி.பி பரிசோதனை செய்ய வேண்டியவர்களின் சளி மாதிரி எலியின் முன் வரிசையாக வைக்கப்படுகிறது, அதனை நுகர்ந்து கிருமித்தொற்று உள்ளவற்றை எலிகள் சுட்டிக் காணபிக்கின்றன. இதனால் குறைந்த செலவில் அதிக நபர்களுக்கு, குறைந்த நேரத்தில் டி.பி பரிசோதனை செய்ய முடிகிறது என்று இந்த ஆய்வுக்கூடத்தை நடத்தி வரும் அபோபோ சாரிட்டி அமைப்பு தெரிவித்துள்ளது.
தான்சானியாவில் இதற்கு முன் கண்ணி வெடிகளை கண்டு பிடிக்க எலிகளை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment