Header Ads



கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு அஷ்ஷெய்க் ஹனீபா மதனியின் பகிரங்க கடிதம்


மதிப்புக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் அவர்களுக்கு,
பொதுச் செயலாளர்,
பொது பலசேனா  அமைப்பு,
இல. 32, சம்புத்த ஜெயந்தி மாவத்த,
கொழும்பு – 05. 

அண்மைக்காலங்களாக நமது நாட்டின் ஊடகங்களுடாக நீங்கள் செயலாளராகப் பணிபுரிகின்ற பொது பல சேன எனும் இயக்கம் பற்றியும், அது மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் பற்றியும் அறிந்த எனக்கு உங்களோடு நேரடியாகவோ, கடிதம் மூலமோ தொடர்பு கொள்ள வேண்டும் எனும் உணர்வு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை.

கடந்த 28.03.2013ந் திகதி பெபிலியானவில் 'பெஷன் பக்' என்ற இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பாடுபடுகின்ற, அரசுக்கு பாரிய வரி செலுத்துகின்ற, இந்த நாட்டின் முஸ்லிம் பிரஜை ஒருவரின் வியாபார ஸ்தாபனம் தாக்கி கொள்ளையடிக்கப்பட்ட செய்தி கிடைத்தவுடன் உங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்ற எனது அந்த விடயத்தை ஆரம்பித்து விட்டேன்.

காவி உடையணிந்து, துறவறத்துடன் கூடிய ஆத்மீகப் பணிக்கும், புத்த தர்மத்தின் மனித நேயப் பணிக்கும் முழுமையாக தங்களுடைய காலத்தை அர்ப்பணித்துப் பணிகளை மேற்கொள்ளும் தங்களுக்கு பகிரங்கமாக இம்மடலை எழுத எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை பெரும் புண்ணியமாகக் கருதுகின்றேன்

இயந்திர மயமாகி அதிவேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் மனித சமூகத்தின் மத்தியில் உலக மயமாக்கலானது பேரெழுச்சி பெற்று விஞ்ஞானத் தொழில் நுட்பத்தில் மக்கள் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், நம்மில் அதிகமானோர் அமைதிக்கு வழிவகுக்கும் ஆத்மீகத்தைப் புறந்தள்ளி முழுக்க முழுக்க லௌகீகத்தை 

நமது தாய் நாடான ஸ்ரீலங்காவில் அதிகப் பெரும்பான்மையான மக்கள் புத்த பெருமான் போதித்த தர்மங்களை சமயமாக ஏற்று வாழ்கின்றனர். புத்த மதம் போதிக்கின்ற அன்பு, கருணை, நீதி, நியாயம், உண்மை, பரோபகாரம், அஹிம்சை... போன்ற நல்ல பண்பாடுகளின் தேவை நமது நாட்டுக்கு மட்டுமன்றி, உலக மயமாக்கலின்போது தேவையென உணரப்படுகின்ற ஆத்மீக வறுமையைப் போக்கவும் அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றது.

இவ்வாறு ஆத்மீக வளர்ச்சிக்கும், புத்த பெருமான் இவ்வுலகுக்கு வழங்கிய அரிய நற்பண்புகளை உலகுக்கு வெளிக் கொண்டு வருவதற்குமாகப் பாடுபட வேண்டிய நீங்கள், அண்மைக்காலமாக 'பொது பல சேனா' எனும் இயக்கத்தினூடாக நமது நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லிம்களுக்கு எதிராக பகிரங்கமாகவே பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றீர்கள்.

பொருட்களுக்கு வழங்கப்படும் 'ஹலால்' சான்றிதழ், முஸ்லிம் பெண்கள் அணியும் 'அபாயா' உடை, முஸ்லீம்களுக்கு வழங்கப்படும் 'ஹஜ்' பிரயாண வசதிகள், காதி நீதிமன்றங்கள், இஸ்லாமிய அடிப்படையிலான வங்கிகள், முஸ்லீம்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்ற பலதார மணம் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டு போவதைக் காணுகின்றோம்.

இவற்றிற்கும் மேலாக பின்வரும் விடயங்களும் முஸ்லீம்கள் மீதுள்ள பெரிய குற்றச்சாட்டுக்களாக தங்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.

1. இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் 12,000 பேர் பாகிஸ்தானில் யுத்தப் பயிற்சி பெற்றுக் கொண்டு நாட்டுக்குள் ஊடுருவியிருக்கிறார்கள்.

2. மாலை தீவு முஸ்லீம்கள் 46,000 பேர் விஸா முடிந்தும் நாடு திரும்பாமல் நாட்டுக்குள் ஒழிந்திருக்கிறார்கள்.

3. சவூதி அரேபியர் 750 பேர் நாட்டுக்குள் அறபு மொழி கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

4. மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் சட்டரீதியற்ற முறையில் இரண்டு கொள்கலன்களில் இந்நாட்டுக்குள் ஆயுதங்களைக் கொண்டு வந்துள்ளார்.

5. இஸ்லாம் சவூதி அரேபியாவில் இருந்து வந்தது. எனவே முஸ்லீம்கள் அனைவரும் சவூதி அரேபியாவுக்குச் சென்று விட வேண்டும்.

இவ்வாறெல்லாம் மக்கள் மத்தியில் இல்லாத பொய்களைச் சொல்லி மக்களை ஓர் கலவரத்தின் பால் உசுப்பிவிடப் பார்க்கின்றீர்கள்.

பாகிஸ்தானிலிருந்து யுத்தப் பயிற்சி பெற்று நாட்டுக்குள் 12,000 பேர் ஊடுருவுவதாக இருந்தால், அல்லது மர்ஹும் அஷ்ரப் அவர்கள் சட்டவிரோதமாக கொள்கலன்களில் ஆயுதங்களைக் கொண்டு வந்தார் என்றால் நமது பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய புலனாய்வுத்துறை என்ன செய்து கொண்டிருக்கின்றது?

மாலை தீவு மக்கள் நமது நாட்டில் தங்கியிருப்பது நமக்கு உகந்ததாக இல்லாவிடின், குடி வரவு குடியகல்வுக்குப் பொறுப்பான பாதுகாப்பு அமைச்சே அவர்களை உடனடியாக வெளியேற்றி இருக்க வேண்டும். எமக்குத் தெரிந்த வரையில் சவூதி அரேபியப் பிரஜை ஒருவர் கூட நமது நாட்டில் ஆசிரியராக நியமிக்கப்படாமல் இருக்கும்போது ஏன் இவ்வாறு அபாண்டமாகப் பேச முன் வருகின்றீர்கள்?

இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்கள் அனைவரும் சவூதி அரேபியாவுக்கே சென்று விட வேண்டும் என நீங்கள் கூறி வருவதைப்போல், இந்தியாவிலிருந்து மகிந்த தேரரினால் இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட புத்த மதத்தைப் பின்பற்றும் நீங்களும், பௌத்தர்களும் அந்நாட்டுக்கே செல்ல வேண்டுமென எப்போது கோரிக்கை விடுவீர்கள்?

எனவே, நமது நாட்டில் அறவே நடைபெற்றிராத சம்பவங்களைப் பற்றியும், இனி எப்போதும் நடைபெற முடியாத விடயங்களைப் பற்றியும் தங்களைப் போன்றவர்கள் அலட்டிக் கொள்வது வீணென்பது எனது அபிப்பிராயமாகும்.

வட கிழக்கில் யுத்தம் நடந்தபோது விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியில் பலம் பெற்றிருந்தார்கள். தமது போராட்டத்தைக் கூர்மைப்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அப்பகுதியில் வசித்த சகோதர முஸ்லிம் இனத்தின் புத்திஜீவிகளைக் கொலை செய்தார்கள். அவர்களின் வர்த்தக நிலையங்களைக் கொள்ளையடித்தார்கள். பள்ளிவாசல்களில் வணக்க வழிபாடுகளிலும், பிரயாணங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களைச் சுட்டுத் தள்ளினார்கள். முஸ்லிம்கள் என்ற குற்றத்திற்காக யாழ்ப்பாணத்திலிருந்து ஒரே இரவில் உடுத்த உடையுடன் வெளியேற்றப்பட்டார்கள்.

புலிகளின் இத்தகைய அடாவடித்தனமான மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை எல்லாம் அங்கு வாழ்ந்த தமிழ்ச் சகோதரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களால் ஜீரணிக்கவும் முடியவில்லை. அடுத்தடுத்த வீடுகளில் குடியிருந்த தமிழர்கள், முஸ்லீம்களுக்கு நடந்த இந்தக் கொடூரங்கள் பற்றி கண்ணீர் வடித்தார்கள். தம்மோடு எடுத்துக் கொண்டு போக புலிகளால் தடுக்கப்பட்ட முஸ்லீம்களின் நகை, பணம், பெறுமதியான ஆவணங்கள் என்பவற்றைத் தமிழ்ச் சகோதரர்கள் தமது பொறுப்பில் வாங்கி வைத்திருந்து பின்பு அவற்றை நம்பிக்கையுடன் முஸ்லீம்களிடம் கையளித்தார்கள். ஆனால் அவர்களால் வாய் திறந்து பேசுவதற்கு மாத்திரம் அப்போது முடியாதிருந்தது. 

தம்மிடம் பலமிருக்கின்றது, தகுந்த சந்தர்ப்பமும் வாய்த்து விட்டது என்பதற்காக நீதி, நியாய, மனிதாபிமான வரையறைகளை மீறி, தர்மங்களை நேசியாது அவர்கள் மேற்கொண்ட அவ்வாறான நடவடிக்கைகள் மூலம் அவர்கள் வெற்றியடையவில்லை. மூன்று தசாப்த கால அடக்கு முறையின் இறுதியில் அவர்கள் தோற்றே போனர்கள். இது நாம் கண்டு கொண்ட இந்த நாட்டின் அண்மைக்கால வரலாறாகும்.

நீங்களும் இப்போது இதேவிதமான நடவடிக்கைகளில்தான் இறங்கியுள்ளீர்கள். பள்ளிகளை உடைக்கின்றீர்கள். முஸ்லிம்கள் சாப்பிடக் கூடாது என குர்ஆனில் கட்டளையிடப்பட்ட பன்றியை 'அழ்ழாஹ்' என்ற பெயருடன் சேர்த்து படம் பிடித்து பள்ளியில் ஒட்டுகின்றீர்கள்.

பள்ளிவாசல்கள் தொழுகின்ற இடம். அங்கு வேதமும் கற்பிக்கப்படுகின்றது. ஆத்மீகப் பயிற்சியும் வழங்கப்படுகின்றது. முஸ்லீம்களைப் பொறுத்தவரை கட்டாயம் தினமும் ஐந்து வேளைகள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகையில் ஈடுபட வேண்டும். இதனைச் செய்யாத ஒருவர் பூரண முஸ்லீமாக இருக்க முடியாது. அவ்வாறு தொழாமல் விடுவதற்காக அவருக்குத் தண்டனை உண்டு. இது எமது நம்பிக்கை.

போராடப் புறப்பட்ட புலிகளின் ஆயுதம் முஸ்லிம்களையும், பள்ளிவாசல்களில் தொழுதவர்களையும் நோக்கித் திரும்பியது போன்று, புத்த தர்மத்தைப் போதிக்கவெனப் புறப்பட்டிருக்கும் நீங்களும் துவேஷம் என்கிற ஆயுதத்தை ஏந்திக்கொண்டு முஸ்லிம்களுடைய அத்தனை சமயக் கடமைகளையும் நோக்கி குறி வைத்துச் செயற்பட்டு வருகின்றீர்கள். 

புலிகளின் கொடூரமான நடவடிக்கைகளை எவ்வாறு தமிழ்ச் சகோதரர்கள் அங்கீகரிக்க மறுத்தனரோ, அதைவிட ஒரு படி மேலாக சிங்களச் சகோதரர்களும் இனத்துவேஷமான உங்களது இவ்வாறான எளிய நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் நிலையில் இல்லை. இதை இந்த நாடு நன்கு அறியும்.

ஓர் இனத்தை அடக்கி அல்லது அழித்து இன்னுமொரு இனம் சிறப்படைய முடியாது. உலக வரலாற்றில் 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களை ஹிட்லர் கொன்று குவித்தும் யூத இனம் இப்போதும் வாழ்ந்து கொண்டே இருக்கின்றது. இது வரலாறு.

நமது நாட்டில் அண்மைக் காலங்களிலிருந்து அரசியல் அதிகாரங்களை, நாடாளுமன்ற உறுப்புரிமையை, அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக அரசியல்வாதிகள் ஓர் குறுக்கு வழியைப் பின்பற்றிப் பழகிக் கொண்டார்கள். அது, தான் சார்ந்த சமூகத்தின் மத்தியில் வாழும் இன்னுமோர் சக இனத்திற்கு எதிராகப் பொய்களையும், புரளிகளையும் மையப்படுத்தியதாக இனத்துவேஷக் கருத்துக்களை அள்ளி வீசி, அதனூடாக தாம் சார்ந்த சமூக மக்களின் உணர்வலைகளை உசுப்பேற்றி, அந்த அலைகளின் ஊடாக இலகுவாக அம்மக்களின் வாக்குகளைப் பெற்று தமது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும், அமைச்சுப் பதவிகளையும் பெற்று வருகின்றனர். இதற்குத் துணையாக குறைந்த செலவில் உங்களைப் போன்ற சமயத்தைப் போதிக்க வேண்டிய நல்லவர்களையும் ஈடுபடுத்திக் கொள்கின்றனர். அப்போதுதான் மக்களும் அதனை நம்புவார்கள்.

ஹலால் ஒழிப்பு, அபாயாத் தடை, பள்ளிவாசல்கள் உடைப்பு போன்ற முஸ்லீம்களால் சமயக் கடமைகளாக நம்பிக்கை கொண்டுள்ள விடயங்களை இழிவுபடுத்தி அவர்களைச் சீற்றம் அடையச் செய்து இதேபோன்று சிங்கள பௌத்தர்களுக்கு முஸ்லீம்களை மோசமானவர்களாகவும், வேண்டப்படாதவர்களாகவும் சித்தரித்துக் காட்டி அவர்களை உசுப்பேற்றுவதன் மூலம் இரு இனங்களையும் முட்டி மோத விடவும், அதனூடாக இனக் கலவரங்களை ஏற்படுத்தி இரு சமூகங்கள் மத்தியில் விரிசலையும், பிரிவினையையும் ஏற்படுத்தி இதனூடாக அவர்களின் அரசியல் கனவுகளை நனவாக்கிக் கொள்ளப் பார்க்கின்றனர்.

இந்தத் தீய நடவடிக்கைகளின் மூலம் நமது நாட்டுக்கும், பௌத்த தர்மத்திற்கும் ஏற்படப் போகின்ற கெட்ட பெயர் பற்றியோ அல்லது இதன் விளைவாக இந்நாட்டு அப்பாவி மக்களின் உயிர் உடைமைகளுக்கு ஏற்படப் போகின்ற அழிவுகள் பற்றியோ இக்கொடூர உணர்வு கொண்டவர்கள் அலட்டிக் கொள்வதில்லை.

உலகளாவிய ரீதியில் முஸ்லீம்கள் ஏறக்குறைய 150 கோடி மக்கள் வாழ்கின்றார்கள். 56 நாடுகளில் ஆட்சி செய்கின்றனர். இவர்கள் எல்லாக் கண்டங்களிலும் பரந்து வாழ்கின்றார்கள். வளர்ச்சியடைந்த அமெரிக்கா போன்ற நாடுகளிலும், கம்யூனிஷம் வளர்ச்சி பெற்ற ரஷ்யா, சீனா போன்ற தேசங்களிலும் கூட வாழும் முஸ்லீம்கள், எங்கிருந்தாலும் அவர்கள் பள்ளிகளில் தொழுவது, ஹலால் உணவுகளை உண்பது, பெண்கள் தங்களின் உடலை மறைத்து ஆடை அணிவது என்பதிலிருந்து அவர்களால் தவிர்ந்து கொள்ள முடியாது. ஏனெனில் அவை யாவும் வேதத்தினூடாக அவர்கள் மீது கடமையாக்கப்பட்டவைகளாகும்

இஸ்லாம் மார்க்கமானது, பல் குத்தும் குச்சி தொடக்கம் மரணித்த உடலைச் சுற்றும் 'கபன்' பிடவை வரை அவை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப்பற்றி மிகத் தெளிவாகப் போதித்திருக்கும் ஒரு முழுமையான வாழ்க்கை வழிகாட்டியாகும்.

நமது நாட்டில் வாழும் முஸ்லீம்கள், நாடு சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே அவர்களின் சமயக் கடமைகளைத் தங்கு தடையின்றி மேற்கொண்டு வருகின்றார்கள். முஸ்லீம்களைப் பொறுத்தவரை அவர்களின் சமயக் கடமைகளை உயிரைத் துறந்தேனும் பின்பற்றவே முனைவார்கள். இதுதான் வரலாறு. பட்டம் பதவிகள் என்பன உண்மையான ஒரு முஸ்லீமுக்கு சமயக் கடமைகளை விட மேம்பாடாக எப்போதும் இருக்கப் போவதில்லை.

முஸ்லீம்கள் இந்த நாட்டை ஆக்கிரமித்து ஆட்சி செய்யப் பார்க்கின்றனர் என வீணான பீதியை சிங்கள மக்கள் மத்தியில் கிளப்பி விடுகின்றனர். தமது அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்காக அவர்களால் மேற்கொள்ளப்படும் நச்சுத்தன்மையான இத்தகைய இனக்குரோதப் பிரச்சாரங்களால் பொதுமக்களின் மனங்கள் மிகவும் பாதிப்படைகின்றன.

இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் கூட ஜனாதிபதியாக, பிரதமராக ஓர் முஸ்லிம் வரலாம். பல சந்தாப்பங்களில் அவ்வாறு நடைபெற்றுமுள்ளது. ஆனால் நமது நாட்டில் அப்படியான உயர் அரச பதவிகளுக்கு வர வேண்டும் என்று முஸ்லீம்கள் விரும்புவதே இல்லை. இதுதான் இங்குள்ள முஸ்லிம்களின் மனோ நிலையாகும்.

இந்த நாட்டின் பெருவாரியான அரச உத்தியோகங்களை பெரும்பான்மைச் சமூகம் நீண்ட காலமாக அனுபவித்து வருகின்றது. ஆனால் முஸ்லீம்கள் அது பற்றியும் அலட்டிக் கொள்வதில்லை. முப்படைகளிலும், அரச, திணைக்கள தலைமைப் பொறுப்புக்களிலும் பெருவாரியாக பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களே உள்வாங்கப்பட்டிருக் கின்றார்கள்.

பௌத்த குருமாருக்கு வழங்கப்படுகின்ற வாய்ப்பு வசதிகளும், கௌரவங்களும் ஏனைய சமயக் குரவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இவற்றையும் பெரு மனதோடே நாம் நோக்கி வந்திருக்கின்றோம். 

பிரித்தானியப் பேரரசு நமது நாட்டிற்கு சுதந்திரம் வழங்க முற்பட்ட வேளையில் இந்த நாட்டின் முஸ்லீம் தலைவர்களிடம் அதுபற்றி அபிப்பிராயம் கேட்டபோது, 'முதலில் எமது நாட்டுக்குச் சுதந்திரத்தைக் கொடுங்கள். எமக்குள்ள பிரச்சினைகளை நாம் எமக்குள் பேசித் தீர்த்துக் கொள்வோம்' என்று மர்ஹும் ரி.பி. ஜாயா அவர்கள் அளித்த பதில் இந்த நாட்டு முஸ்லீம்களின் இலட்சணம் என்ன என்பதனை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

புத்தகயா, திருப்பதி போன்ற சமய ஸ்தலங்களுக்கு பயணம் செய்யும் யாத்திரீகர்களை விட, புனித ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றச் செல்கின்றவர்கள் மதிக்கப்படுவதாகவும், சௌக்கியமாகக் கவனிக்கப்படுவதாகவும் அங்கலாய்த்திருக்கின்றீர்கள்.

ஹஜ் என்பது முஸ்லீம்களின் விசுவாசம் எனும் கட்டிடத்தின் ஐந்தாவது தூண் ஆகும். வசதி படைத்தவர்கள் கட்டாயம் தமது வாழ்வில் ஒரு முறை புனித மக்கா சென்று ஹஜ் செய்ய வேண்டும். புனித மக்கா நகரம் என்பது ஜித்தாவுக்கு அருகே இருக்கிறது. 

ஜித்தாவுக்கு தொழிலுக்காக அல்லது வியாபாரத்திற்காகச் செல்லுகின்ற ஒருவர் இரு வழி விமானப் பயணச் சீட்டுக்கு 50,000ஃ- அல்லது 55,000ஃ- செலுத்துகின்றார். ஆனால் ஹஜ்ஜு செய்யச் செல்கின்ற முஸ்லிPம்கள் இதற்காக அரசுக்கு 120,000ஃ- செலுத்துகின்றனர். சமயக் கடமைகளை நிறைவேற்றச் செல்லுகின்றோம் என்பதனால் இதுபோன்ற சுமைகளையும், சிரமங்களையும் நாங்கள் பெரிதுபடுத்துவதில்லை. 

ஒரு பெண் சாதாரணமாக தனக்குரிய ஓர் உடையை வாங்கிக் கொள்ள 1,000ஃ- அல்லது 2,000ஃ- போதுமானதாகும். ஆனால் முஸ்லீம் பெண் ஓர் அபாயாவை வாங்கிக் கொள்ள அதை விடப் பன்மடங்குப் பணம் தேவைப்படும். இருந்தபோதும் கடமையைச் செய்ய வேண்டும் என்பதனால் அந்த மேலதிகச் செலவைப் பற்றி பெரிதுபடுத்திக் கொள்வதில்லை. பெண்கள் அணியும் ஆடைகள் பிற ஆண்களின் ஆசைகளைத் தூண்டக் கூடியதாக இருக்கக் கூடாது என்பது இஸ்லாமிய வரையறையாகும்.

பாலியல் உணர்வுகளைத் தூண்டும் ஆடைகளை அணியக் கூடாது என்று போதிக்க வேண்டிய பௌத்த துறவியாகிய நீங்கள், பெண்களின் அவயவங்கள் தெரியும்படியான ஆடைகள் அணிய வேண்டும் எனப் பிரச்சாரம் செய்வது மிகவும் வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

தங்களின் பேச்சுக்களிலும், அறிக்கைகளிலும் 'நாங்கள் பாரம்பரிய முஸ்லீம்களுக்கு ஆதரவானவர்கள். அடிப்படைவாத முஸ்லீம்களுக்கு மட்டுமே எதிரானவர்கள்' என்று அடிக்கடி சுட்டிக்காட்டியிருக்கின்றீர்கள். ஆனால் தங்களால் அனுராதபுரத்தில் தகர்க்கப்பட்ட ஸியாரமும், குருநாகலில் உடைக்கப்பட்ட பள்ளியும், பலாங்கொடை ஜெய்லானியில் பறித்தெடுக்கப்பட்ட வளாகமும் நீங்கள் விரும்புகின்ற பாரம்பரிய முஸ்லீம்களுக்குச் சொந்தமானவைகளே!

இந்நாட்டின் சிறப்பம்சங்கள் பற்றி நமது நாட்டின் முஸ்லீம்கள் தொன்று தொட்டே வெளியுலகுக்குப் பிரச்சாரப்படுத்தி வந்திருக்கின்றார்கள். மத சுதந்திரமும், சகிப்புத்தன்மையும் உள்ள நாடு என்றும், பல்லின மக்கள் பல்வேறு சமயங்களைப் பின்பற்றிக் கொண்டு பல கலாச்சாரங்களுடன் வேற்றுமையில் ஒற்றுமைப்பட்டு வாழுகின்ற சிறந்த தேசமென்றும் சொல்லி வைத்த இந்த நாட்டைப் பற்றி வெளியுலகில் வாழும் மக்களுக்கு இதற்கு முரணான செய்திகளும், கருத்துக்களும் இப்போது சென்றடைவதை எம்மால் சகிக் முடியாதுள்ளது. இந்த நாட்டின் வரலாற்றில் பல கரும்புள்ளிப் பக்கங்களாகவே இவை பதியப்படுகின்றன.

பள்ளிவாசல்களை உடைக்க வேண்டும், அபாயா அணிய விடமாட்டோம் எனறெல்லாம் நீங்களும் உங்களைப் போன்ற துறவிகளும் போர்க்கொடி தூக்குகன்ற இதேவேளை, இங்கிலாந்தின் ஸ்கொட்லான்ட் மாநிலத்தின் மிகப் பெரும் நகரங்களில் ஒன்றான அபென்டனில் அமைந்துள்ள சென்.ஜோன்ஸ் தேவாலயத்தில் வெள்ளிக்கிழமைகளில்n முஸ்லீம்கள் ஜும்ஆத் தொழுகையை நடாத்துவதற்கு அத்தேவாலயத்தின் தலைமைக் குருவானவர் தாமாகவே முன்வந்து அனுமதி வழங்கியுள்ளார் எனும் பத்திரிகைச் செய்தியை இம்மடலை எழுதும்போதே வாசிக்கக் கிடைத்தது.

ஐசக் பூபாலனே எனும் மேற்படி தேவாலயத்தின் தலைமைக் குருவானவர் தான் ஏன் இவ்வாறு வரலாற்று ரீதியான புகழ்மிக்க நடவடிக்கையை மேற்கொண்டேன் என்பதை பின்வருமாறு விளக்குகிறார்:

'வெள்ளிக்கிழமைகளில் இங்குள்ள முஸ்லிம்களின் செய்யித் முஸ்தபா ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் மக்களால் நிரம்பி வழியும். இடமின்மையால் மக்கள் மழையில் நனைந்து கொண்டும், குளிரில் நடுங்கிக் கொண்டும் இருப்பதை அவ்வழியால் செல்லும் நான் அடிக்கடி அவதானித்துக் கொண்டு செல்வேன். முஸ்லீம்கள் தொழும்போது நெற்றியும், கால்களும், கைகளும் நலத்தில் கட்டாயம் பட வேண்டும் என்பது எனக்குத் தெரியும். இவ்வாறு வீதியோரத்தில் கரடுமுரடான நிலத்தில் நெற்றியையும், கால்களையும், கைகளையும் அவர்கள் பதிப்பது என் மனதுக்கு மிகக் கஷ்டமாக இருந்தது.'

'எமது தேவாலயமானது அப்பள்ளிவாசலுடன் ஒப்பிடும்போது மிகவும் விசாலமானது. வெள்ளிக்கிழமைகளில் குறித்த நேரத்தில் தேவாலயத்தில் மக்கள் கூடுவதில்லை. அந்த நேரத்தில் பல அறைகள் வெற்றிடமாக இருக்கும். எமது அயலவர்கள் கஷ்டப்படும்போது நாம் அதனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவேதான் முஸ்லீம்களுக்கு தேவாலயத்தின் கதவுகளைத் திந்து கொடுப்பதே சிறந்தது எனத் தீர்மானித்தேன்.'

'இதுபற்றி தேவாலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடியபோது, முதலில் சிலர் இது நமது பிரச்சினையல்லவே என்றார்கள். என்னைப் பொறுத்த வரையில் இது மிகப் பெரும் பிரச்சினையாகும். அவர்கள் கஷ்டப்படுவதை நான் எனது கண்களால் பார்க்கின்றேன். அயலவர்களோடு நேசமாக நடக்கும்படியே பைபிள் கூறுகின்றது. பைபிளின் வழிகாட்டலைப் புறக்கணித்து எம்மால் நடக்க முடியாது. வணக்க வழிபாட்டில் ஈடுபடுவது ஒன்றும் தவறான விடயமல்ல. வணக்க வழிபாட்டை ஊக்குவிப்பதே எனது கடமையாகும். இந்த உதவி மதம் என்பதையும் தாண்டி மனிதாபிமானத்தின் அடிப்படையில் அமைந்தது என்பதே இங்கு முக்கியமாகும். நாம் மதத்தால் வேறுபட்டிருப்பினும் மனிதர்கள் என்ற வகையில் நாம் எல்லோரும் ஒன்றே. அமெரிக்காவில் பல தேவாலயங்களில் தொழுகை நடைபெறுகின்ற போதிலும் இங்கிலாந்தில் இதுவே முதல் தடவையாக நடைபெறுகிறது' என்றார்.

பௌத்த சமயத்தில் எழுச்சி ஏற்பட வேண்டும் எனும் தங்களின் விருப்பம் நிறைவேற வேண்டுமானால் பின்வரும் விடயங்களை நமது நாட்டில் நடைமுறைப்படுத்த முன்வந்து முயற்சியுங்கள்.

1. மதுபானத்தை ஒழிக்க நடவடிக்கை எடுங்கள்.
2. சூதாட்டத்தை தடை செய்யுங்கள்.
3. போதை வஸ்துக்கள் அனைத்துக்கும் தடை விதியுங்கள்.
4. பாலியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையங்களை மூடி விடுங்கள்.
5. இளைஞர்களை பௌத்த அறப் போதனைகளின் பால் கவர்ந்திழுங்கள்
6. உயிர்களும், உடமைகளும் குரோதத்தால் சேதப்படுத்தப்படுவதை வெறுத்து நிறுத்துங்கள்.
7. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பௌத்தத்தைக் கற்றிந்த உங்களைப் போன்றவர்கள் வன்முறைக் கலாச்சாரத்திலும், இனவாத மதவாதப் பிரச்சாரங்களில் இருந்தும் விடுபட்டு உடனடியாகவே உண்மையான பௌத்த அறநெறிப் போதனைகளை மீண்டும் ஆரம்பியுங்கள்.

மேலும், நீங்கள் விரும்பும் பட்சத்தில் முஸ்லிம் சமூகத்தை நோக்கியும் உங்கள் பணியை விஸ்தரிக்க முடியும். இஸ்லாமிய சட்டப்படி ஒரு ஆண், பெண்ணுக்கு 'மஹர்' எனும் திருமணத் தொகையை வழங்கியே திருமணம் செய்ய வேண்டும். ஆனால் இலங்கையில் முஸ்லீம்கள் பலர் பெண்ணிடமிருந்து கைக்கூலி, சீதனம் என்பவற்றைப் பெறுகின்றனர். இது இந்த நாட்டு முஸ்லிம்களில் பலர் புரிகின்ற பாதகமான செயலாகும்.

இதைத் தடுப்பதற்கும், நிறுத்துவதற்கும் உங்களால் ஏதும் உதவ முடியுமாயின், நமது நாட்டுப் பெண்களை வெளிநாடுகளுக்குப் பணிப் பெண்களாகச் செல்வதிலிருந்தும் தவித்துக் கொள்ளக்கூடிய ஒரு நல்ல சூழ் நிலை நிச்சயமாக உருவாகும்.

இறுதியாக, இந்த நாட்டை ஆட்சி செய்த கீர்த்திமிக்க மன்னர்களின் காலங்களிலும், அதன் பின்னர் ஜனநாயக முறையில் மக்களால் தெரிவு செய்யப்பட்டு நல்லாட்சியுடன் நிர்வாகம் செய்து வந்த பெருமைக்குரிய பிரதமர்களின் காலங்களிலும், இறுதியாக நாடு சுதந்திர ஜனநாயக சோஷலிச  குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிகளாக ஆட்சி செய்த அதிமேதகு ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன, ஆர். பிரேமதாச, அவர்களின் காலம் தொடக்கம்  ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க அவர்களின் காலம் வரையிலும் நம்மத்தியில் ஏற்பட்டிராத இனப் பிரிவினையும், சமூகக் குரோதமும், மத வாதமும் எவ்வாறு இப்போது நமக்குள் ஏற்பட்டது என்பதைப் பற்றி நீங்களும் நானும் நிதானமாக நன்கு சிந்தித்து, இந்த அழகிய இலங்கைத் தேசத்தை முழு உலகுக்குமே முன்மாதிரியான ஒரு தர்ம ராஜ்ஜியமாக உருவாக்குவதற்குப் பாடுபட முன்வருமாறும் தங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.

எனது மனந்திறந்த இந்த மடல், தமிழ் மொழியில் எழுதப்பட்டிருப்பதால் இதனை நீங்களும் இலகுவாகப் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் சிங்கள மொழியிலும் மொழி மாற்றம் செய்து இணைத்துள்ளதோடு, இந்த மடலில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ள அநேக விடயங்கள் நமது நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் இதன் பிரதியொன்றை  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அவர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளேன் என்பதையும் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த மடல் தொடர்பாக தங்களின் காத்திரமான பதிலை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நான், நம் நாட்டிலும், நமது வாழ்விலும் நிரந்தரமான சாந்தியும், சமாதானமும் உண்டாகப் பிரார்த்திக்கின்றேன்.

மிக்க நன்றியுடன்,
அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி, 
தவிசாளர்,
தேசிய ஒருமைப்பாட்டிற்கான முஸ்லிம் பேரவை


23 comments:

  1. wowow masha allha very nicely ..

    ReplyDelete
  2. "பட்டம் பதவிகள் என்பன உண்மையான ஒரு முஸ்லீமுக்கு சமயக் கடமைகளை விட மேம்பாடாக எப்போதும் இருக்கப் போவதில்லை." இதற்கு நமது பெரும்பாலான அரசியல் தலைவர்கள் விதிவிளக்காகவே திகழ்கின்றனர்.

    ReplyDelete
  3. அருமையான மடல்

    ReplyDelete
  4. very good, jazakallahu khair

    ReplyDelete
  5. அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
    இலங்கை முஸ்லிம்களையும் இஸ்லாத்தின் மேன்மை பற்றியும் தீவிரவாத தேரருக்கு நீங்கள் வழங்கி இருகின்ற தெளிவானது மிக காத்திரமானதும் காலத்தின் தேவையானதுமாகும். அந்த தேரரின் செயற்பாட்டினை அவரிடமே வெளிபடையாக நிராகரித்து விமர்சனம் செய்திருக்கும் உங்கள் தொனி வரவேட்கத்தக்கதும் பாரட்டபடகூடியதுமாகும். தலை நிமிர்ந்து உறுதியோடு எழுதி இருக்கும் இந்த மடலுக்கான அந்த தேரரின் பதிலை மிக விரைவில் எதிர்பார்கிறேன்...

    ReplyDelete
  6. please traslate this in sinhala.. please

    ReplyDelete
  7. pls translate this to sinhala

    ReplyDelete
  8. மிகவும் அருமையானதொரு தொகுப்பு, மிகவும் நீழமான கட்டுரைகளை சிலவேளைகளில் வாசிப்பதற்கு கஸ்டமாகவோ அல்லது சுவாரஸ்யமில்லாத்துபோன்றோ இருக்கும் ஆனால் ஆரம்பம் முதல் முடிவுவரை மிகவும் வேண்டப்பட்டதும் புதிய படிவமொன்றிலும் அமைந்துள்ளது, கண்டிப்பாக இத்தொகுப்பு பொதுபலசேனவுக்கு போய்ச்சேரவேண்டும்.

    ReplyDelete
  9. yaa allah, naju ullam konda vanjaharhalai intha madalin moolamaawadhu velichchathukku kondu varuwaayaaha,, avarhalukku hidhayathai nassebakkuwaayaha, aameen!!!

    ReplyDelete
  10. Aanavam pidiththa gananasara therarukku Haniffa madaniyin kadithathin perumathi puriyathu.eanenil venumenre muslimkalayum,islathayum ethirpavarthane!

    ReplyDelete
  11. அல்ஹம்துலில்லாஹ் மிகவும்நேர்மையான மடல் இந்த துணிவு நமது மக்கள் பிரதிநிதிகளிடம் இல்லாததுதான் இன்றயபிரச்சினை, உங்கள் முயற்சிக்கு இறைவன் நற்கூலி வழங்குவான்

    ReplyDelete
  12. Moulavi,S.L.M.Haneefa,we absolutely thanks for this Article, because, the BBS problem start from in srilankan i never read like article so bbs activities hereafter they are understood. Thanks ones again

    ReplyDelete
  13. very good later
    நல்ல கடிதம்

    ReplyDelete
  14. Great...Aricle...
    Masah allah..great letter,,,,,
    Something is better than nothing.....Some muslim ministers keep quit yet..... But Ash.Haneefa mathani you r great...Jezakkallahu hairan Regards AKP muslim youths

    ReplyDelete
  15. Ash sheikh S.L.M. Haneefa Madani pictured Sri Lankan Muslim's hearts.
    May Allah bless him. Let's see how their conscientious react.

    ReplyDelete
  16. I felt that Marhoom M.H.M. Ashraff was speaking at the parliament.

    ReplyDelete
  17. Superb superb jazakallahu khairan shaik ataalallahu umuraka bissihhati wal aafiyah wa waffaqa lakas sabaata bimisli haada

    ReplyDelete
  18. may allah help you more ,,,,im really proud of you...

    ReplyDelete
  19. மிக நீண்ட நாட்களுக்குப் பின் நல்லதொரு தர்க்க ரீதியான கடிதத்தை வாசிக்கக் கிடைத்தது.

    //நீங்கள் விரும்பும் பட்சத்தில் முஸ்லிம் சமூகத்தை நோக்கியும் உங்கள் பணியை விஸ்தரிக்க முடியும். இஸ்லாமிய சட்டப்படி ஒரு ஆண், பெண்ணுக்கு 'மஹர்' எனும் திருமணத் தொகையை வழங்கியே திருமணம் செய்ய வேண்டும். ஆனால் இலங்கையில் முஸ்லீம்கள் பலர் பெண்ணிடமிருந்து கைக்கூலி, சீதனம் என்பவற்றைப் பெறுகின்றனர். இது இந்த நாட்டு முஸ்லிம்களில் பலர் புரிகின்ற பாதகமான செயலாகும்.இதைத் தடுப்பதற்கும், நிறுத்துவதற்கும் உங்களால் ஏதும் உதவ முடியுமாயின், நமது நாட்டுப் பெண்களை வெளிநாடுகளுக்குப் பணிப் பெண்களாகச் செல்வதிலிருந்தும் தவித்துக் கொள்ளக்கூடிய ஒரு நல்ல சூழ் நிலை நிச்சயமாக உருவாகும்.//

    நல்ல வைரமான வரிகள். அஷ்ஷெய்க் ஹனீபா மதனிக்கும், யாழ். முஸ்லிம் இணையதளத்தினருக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  20. உங்களின் இக் கடிதத்தை வாசிக்கும் போது கல்முனையில் 2006அம் ஆண்டு நடத்தபட்ட மூதூர் பிரகடனமும் நீங்கள் வழங்கிய தலமையுரையும் எனக்கு நினைவுக்கு வந்தது. மூதூர் மக்களின் அவலநிலை, அதைப்பேசமுடியத அரசியல் தலைவர்கள் தலை நகரில் ஒலிதுக்கொண்டனர், பெடியன்கள் ஆயுதத்துடன் நடமாட்டம். எதையும் பொருட்படுத்தாது நீங்கள் நடாத்தி முடித்த மூதூர் பிரகடனம். எப்போதும் ஆல்லாஹ்வின் உதவி உங்களுடன். வாழ்த்துக்கள். நன்றிகள்.

    ReplyDelete
  21. மாஷாஅல்லாஹ். உங்கள் துனிவுக்கு அல்லாஹ் உங்களுடன் துணை நிற்பானாக!

    ReplyDelete
  22. மிக நீண்ட ஆழமான கடிதம்-
    ஆரம்பம் முதல் இறுதிவரை துடிப்போடும் ஆர்வத்தோடும்-
    படிக்க முடியுமான ஓர் உணர்வலை.
    வெளிக்காட்ட முடியாமல் இருந்த ஆத்மாத்த உணர்வுகளை
    வெளிக்கொண்டு வந்துவிட்டதான மன விடுதலை.
    இக்கடிதம் ஒரு சிறு நூல் வடிவில் மக்களை சென்றடைய வேண்டும்.
    சிங்கள மொழிபெயர்ப்பும் வேண்டியவர்களுக்கு கிடைக்கட்டும்.
    இது வரலாற்றின் தேவை.

    காதர் இப்ராஹிம்,
    முன்னாள் கல்விப்பணிப்பாளர்.
    மருதமுனை.

    ReplyDelete
  23. மாஷாஅல்லா

    ReplyDelete

Powered by Blogger.