Header Ads



இரு கைகளும் இன்றி பிறந்த பெண் கால்களால் விமானத்தை ஓட்டி சாதனை (படம்)



அமெரிக்காவின் அரிசோனா மாவட்டத்தில் 1983ம் ஆண்டு பிறந்த பெண், ஜெசிகா காக்ஸ். பிறவியிலேயே இரு தோள் பட்டைகளுக்கு வெளியே கைகள் இல்லாத நிலையில் பிறந்த இவர், வாழ்வில் சாதனைகள் படைப்பதற்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை பல வகைகளில் நிரூபித்துள்ளார். 

சிறுமியாக இருந்தபோது பல் துலக்குவது, தலை சீவுவது உள்ளிட்ட சுய பராமரிப்பு வேலைகளை இரு கால்களின் உதவியுடன் செய்து பழகிய ஜெசிகா காக்ஸ், இவற்றையெல்லாம் கடந்து பெரிய சாதனைகளை படைக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் வளர்ந்து வந்தார். 

14 வயதானபோது டைப்ரைட்டரில் கால் விரல்களால் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் டைப் செய்து அசத்திய ஜெசிகா, கால்களால் காரை ஓட்டிக் காட்டி முறையான ஓட்டுனர் உரிமத்தை பெற்றார். தற்காப்பு கலையான டேக்வாண்டோவில் கறுப்பு பெல்ட்டை பெற்றுள்ள இவர், நீர் சறுக்கு விளையாட்டு உள்ளிட்ட எல்லா விளையாட்டுகளையும் கால்களால் மட்டுமே விளையாடி சராசரி மனிதர்களை வியப்புக்குள் ஆழ்த்தியுள்ளார். 

இவரது தன்னம்பிக்கையையும், விடா முயற்சியையும் பற்றி அறிந்த 16ம் போப் பெனடிக்ட், ஜெசிகாவை வாட்டிகன் அரண்மனைக்கு வரவழைத்து பாராட்டி ஆசி வழங்கியுள்ளார். 

எல்லாவற்றையும் விட, உச்சகட்ட சாதனையாக குறைந்த எடையுள்ள விமானத்தை கால்களால் இயக்கியபடியே 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து, உலக அளவில் இந்த சாதனையை படைத்த ஒரே நபர் என்ற வகையில் கின்னஸ் புத்தகத்திலும் ஜெசிகா காக்ஸ் தனி இடம் பிடித்துள்ளார். 

'வாழ்வின் உன்னத நிலையை அடைவதற்கு ஊனம் ஒரு தடையே அல்ல' என்பதை செயல் வடிவில் நிரூபித்துள்ள இவர், உலகில் உள்ள 17 நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து, மாற்றுத் திறனாளிகளுக்கு மன வலிமையை ஊட்டும் வகையில் கருத்தரங்கங்களிலும் உரையாற்றியுள்ளார். 

தற்போது 30 வயதாகும் ஜெசிகா காக்ஸ், வாழ்வின் எஞ்சிய காலத்தில் மென்மேலும் பல சாதனைகளை படைத்து வரலாற்றில் இடம் பிடிப்பார் என அவரது நெருங்கிய தோழி ஒருவர் கூறுகிறார். 

No comments

Powered by Blogger.