திருடர்களுக்கு சந்தர்ப்பம் வழங்காதீர்கள் - யாழ்ப்பாண பிரதி பொலிஸ்மா அதிபர்
பெண்கள் தனிமையாகச் செல்லும் வேளைகளில் பெறுமதி மிக்க நகைகள் அணிந்து செல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் தனிமையாகச் செல்லும் போது பெறுமதிமிக்க நகைகளை அணிந்து செல்லும் பெண்களின் தங்க நகைகள் மோட்டார் சைக்கிள்களில் வருவோரால் அபகரித்துச் செல்லப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன.
பொலிஸார் தம்மாலான கடமையை முழுமையாக மேற்கொள்கின்ற போதிலும் ஒரு சில இடங்களில் இத்தகைய திருட்டுக்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. திருடர்களுக்குச் சந்தர்ப்பங்களை நாம் வழங்கக்கூடாது. இந்தவகையில் நகைகள் அணிந்து தனித்துச் செல்வதைப் பெண்கள் தவிர்ப்பதன் மூலம் திருட்டுக்களைக் கட்டுப்படுத்த முடியும்.
அத்துடன் சந்தேகத்துக்கு இடமான முறையில் வீதிகளில் அலையும் மோட்டார் சைக்கிள்களின் இலக்கங்கள் மற்றும் ஆள் அடையாளங்களையும் பொது மக்கள் குறித்துக் கொள்ள வேண்டும். இத்தகையோரது நடமாட்டங்களைப் பொதுமக்கள் அவதானித்த இலக்கங்களைக் குறித்து வைப்பதன் மூலம் குற்றச் செயல்கள் இடம்பெறும் வேளைகளில் உரிய குற்றவாளிகளை இனம் காணல் சுலப மாக இருக்கும்.
இத்தகைய வழிப்பறி போன்ற குற்றங்களை கட்டுப்படுத்த பொது மக்கள் பொலிஸாருக்கு தமக்கு தெரிந்த தகவல்களை வழங்கி உதவ வேண்டும். இது குற்றவாளிகளை இனம் காணவும் கைது செய்யவும் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். யாழ். ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. un

Post a Comment