Header Ads



உயிருக்கு ஆபத்து வந்தால் அதாவுல்லாவும், மகனுமே காரணம் (படங்கள் இணைப்பு)

ஞாயிற்றுக் கிழமை (02) இரவு அக்கரைப்பற்றில் அமைச்சர் அதாவுல்லாவின் குண்டர்களால் தாக்கப்பட்டு தலையிலும், கைகளிலும் பலத்த காயங்களுக்குள்ளாகி கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவரும் ஆதம்லெப்பை மர்ஜூன் (வயது 51) என்பவரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவைரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் திங்கட்கிழமை (03) காலை பார்வையிட்டு ஆறுதல் கூறியதோடு, நடந்த விபரங்களைக் கேட்டறிந்தார்.

கடந்த மாதம் அக்கரைப்பற்றில் அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவிருந்த இஃப்தார் வைபவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தோர், தனது வீட்டின் முன்னாலுள்ள பாதையில் டயர்கள் எரித்தபோது, அதனைத் தடுக்க முயன்றதற்காக அந்தக் குண்டர்களால் தனக்கு விரைவில் உயிர் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை செய்யப்பட்டதாகவும், அது தொடர்பில் உடனே தாம் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததோடு தமக்கு ஏதும் ஆபத்து நிகழ்ந்தால் அதற்கு அமைச்சர் அதாவுல்லாவும்,அவரது மகனும்,பொலிஸாருமே பொறுப்பேற்க வேண்டுமென்றும் கூறியதாக தம்மை வைத்தியசாலையில் சந்தித்த அமைச்சர் ஹக்கீமிடம் தெரிவித்தார்.

தலையில் ஏற்பட்டுள்ள காயம் மூளையில் இரத்தக் கசிவை ஏற்படுத்துமா என்று அப்பொழுது அங்கு கடமையில் இருந்த மருத்துவ அதிகாரியை அமைச்சர் வினவியபோது, உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே பாதிப்புகளைப் பற்றி கூறமுடியுமென மருத்துவர் தெரிவித்தார்.

மர்ஜூன் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள ஆபத்தான காயங்கள் தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரியின் பரிசோதனைக்கு அவரை உட்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என மருத்துவரிடம் அமைச்சர் ஹக்கீம் கேட்டபோது, அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். 

அமைச்சர் ஹக்கீம் இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது, மேலதிகாரிகளுடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுத்து வருவதாகவும்,திங்கட்கிழமை (03)முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹஸன் அலி எம்.பி தேர்தல் ஆணையாளரைச் சந்தித்து, இத்தாக்குதல் சம்பவம் பற்றியும்,ஏனைய தேர்தல் முறைகேடுகள் மற்றும் அத்துமீறல்கள் பற்றியும் கலந்துரையாட இருப்பதாகவும் கூறினார்.

அக்கரைப்பற்றில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூவருக்கும் மர்ஜூன் போன்ற பிரமுகர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்குமாறு தாம் பலமுறை பொலீஸ் மா அதிபரையும் தேர்தல் ஆணையாளரையும் தான் கேட்டுக்கொண்டபோதிலும், அவ்வாறு பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும் அமைச்சர் ஹக்கீம் கவலை தெரிவித்தார்.

இவ்வாறான அடாவடித்தனங்கள் அக்கரைப்பற்றிலும், ஏனைய பிரதேசங்களிலும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமானால், சுதந்திரமானதும், நேர்மையானதுமான தேர்தலை எதிர்பார்க்க முடியாதென்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் தமது கடும் அதிருப்தியையும் விசனத்தையும் வெளியிட்டார்.

தாக்கப்பட்ட ஏ.எல்.மர்ஜுன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று மத்திய குழுவின் உறுப்பினரும்,தேர்தல் நடவடிக்கைக் குழுவின் உறுப்பினரும்,முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு சுயேட்சைக் குழுவொன்றின் வேட்பாளரும்,அக்கரைப்பற்று முஸ்லிம் காங்கிரஸ் பிரதான அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் உரிமையாளருமாவார்.
 




 

1 comment:

  1. எல்லோரும் நல்லவரே ,எந்தக் கட்சியில் குண்டர் படை இல்லை. கட்சிக்கு கெளரவமே ரவுடித்தனம் தானே.

    ReplyDelete

Powered by Blogger.