புலி போல் வெற்றி நோக்கி பாய்ந்து செல்வதை கண்டு கதி கலங்கியுள்ளனர் - ரவூப் ஹக்கீம்
TM
ஆயுத பாணிகள் அன்று செய்ததையே அதிகார தரப்பினர் இன்று செய்து வருகின்றனர் என நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜபல் மலை சிலை விவகாரம், கிண்ணியா வீதி அலங்கார வளைவு நிர்மாண பணி நிறுத்தப்பட்டமை முதலானவை இதில் ஒருவகையே எனவும் அவர் குறிப்பிட்டார்.
மூதூரில் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற இறுதி தேர்தல் பிச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம்,
"எலி போல் பதுங்கியிருப்பதாக என்னைப் பற்றி கூறும் சிலர், புலி போல் வெற்றி நோக்கி பாய்ந்து செல்வதை கண்டு கதி கலங்கியுள்ளனர். இன்று சிறு தொழிலாளர்கள் தொட்டு செல்வந்தர்கள் வரை முஸ்லிம் காங்கிரஸோடு ஒன்றிணைந்துள்ளனர்.
இவ்வேளையில் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையில் ஓட்டை போடலாம் என்று சிறு சிறு கூட்டங்கள் சுற்றித் திரிகின்றன. மிக முக்கியமான கட்டத்தில் இவர்களது செயற்பாடு பாரதூரமான செயலாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் என்னும் இந்த பாரிய இயக்கத்தில் பிளவுகளை ஏற்படுத்துவதற்கு சில குருநில மன்னர்கள் செயற்படுகின்றனர். இவர்களது செயற்பாட்டிற்கு மக்கள் தகுந்த பதிலை தேர்தலில் கொடுப்பதற்கு காத்திருக்கின்றார்கள்.
முஸ்லிம்களது இருப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்கு இத்தேர்தல் ஒரு வாய்ப்பாக அமைய போகின்றது. இதனால் இந்த தேர்தலில் அனைத்து முஸ்லிம்களதும் பங்குபற்றலை ஊறுதிப்படுத்தி கொள்ளவேண்டும். இது விடயத்தில் படித்தவர்கள் மற்றும் புத்திசாலிகள் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

Post a Comment