Header Ads



சோரம் போய்விடக்கூடாது - ரவூப் ஹக்கீம்

 
டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்

கிழக்கு மாகாணத்தில் பொம்மை ஆட்சி வேண்டுமா, அல்லது அதிகாரங்களுடன் கூடிய நல்லாட்சி வேண்டுமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். அங்கு ஆளுநர் மேலாதிக்கச் சக்தியை பிரயோகிக்கும் பொழுது முதலமைச்சரால் பெரிதாக எதையும் சாதித்துவிட முடியாது.

இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், ஏறாவூரில் வியாழக்கிழமை (23) இரவு நடைபெற்ற கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் பொழுது தெரிவித்தார்.

அங்கு உரையாற்றும் பொழுது அவர் மேலும் தெரிவித்தவையாவன,

ஏறாவூரில் இந்தத் தேர்தல் மேடையில் பேசும் பொழுது கடந்த சில நாட்களாக நிலவிய சலனம், சஞ்சலம் என்பனவற்றுக்கு மத்தியில் கட்சியின் தலைமை என்ன சொல்லப் போகின்றது என்ற எதிர்பார்ப்பு முஸ்லிம் காங்கிரஸ் அபிமானிகளின் முகங்களில் பிரதிபலிப்பதை என்னால் உணரமுடிகிறது.

நன்கு பழுத்துக் கனிந்த பழமாக கட்சியின் வெற்றி திரண்டு வரும் நிலையில் மரத்தைக் குலுக்கி பழத்தை விழ வைக்கும் அல்லது அந்தப் பழத்தைப் குத்திக்குதறி அழுக வைக்கும் சம்பவங்கள் எதையும் கட்சிப் போராளிகள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்பது நிதர்சனமாகத் தெரிகின்றது.

இன்று காலை எனது அழைப்பையேற்று தவிசாளர் பஷீர் சேகுதாவூத் எனது வீட்டிற்கு வந்து என்னுடன் கலந்துரையாடிய போது மேடைகளில் கட்சிக்காக உரையாற்றுவதாகக் கூறியிருக்கிறார். 

கட்சியின் வெற்றிப் பாதையை நோக்கிய  திக்குத் திசைகள் பற்றியும் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றியும் நாம் நிதானமாக சிந்தித்து மிகவும் சாதூரியமாக கையாள வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம்.

இந்தக் கட்சியின் வெற்றியைத் தட்டிப் பறித்துவிடலாம், கொச்சைப்படுத்திவிடலாம் என்றவாறு தடியெடுத்தவர்களெல்லாம் வேட்டைக்காரராகியிருக்கிறார்கள்.

தலைவர் முதல் அடிமட்டத் தொண்டர் வரை பக்குவம் இல்லாமல் இந்த இயக்கத்தை கையாளுகின்றோமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பலவிதமான சவால்களையும், கண்டங்களையும் தாண்டிச் செல்ல வேண்டியுள்ளது. இதற்கு முன்னரும் தேர்தல்களின் போது பல சவால்களையும் நெருக்கடிகளையும்  சந்தித்திருக்கிறோம். மக்கள் வாஞ்சையோடு கட்சியை அரவணைக்க முன்வந்துள்ளனர்.

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் அதிரடி முடிவெடுத்து தலைமையும், தவிசாளரும் செயலாளர் நாயகமும் களமிறங்கிய வியூகம் அனைவரும் அறிந்ததே. பாதுகாப்புக் கெடுபிடிகள் அப்பொழுது மிகவும கடுமையாக இருந்தன.

இப்பொழுதும் இயல்பு நிலை அங்கும் இங்குமாக பாதிக்கப்பட்டுள்ளது. அக்கறைப்பற்றில் ஓரளவு அட்டகாசம் தலைதூக்கியது. திருகோணமலையில் எமது சிங்கள வேட்பாளரின் வாகனம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. ஏறாவூரில் ராசிக் என்ற கட்சி அபிமானியின் கடை கொளுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தல் மிகவும் நம்பகத்தன்மையான தேர்தலாக இருக்க வேண்டும். ஏனெனில் சிறுபான்மைச் சமூகங்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸூம் பங்குபற்றும் இத் தேர்தலை சர்வதேச சமூகம் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கின்றது.

நேற்று ஜப்பானிய விஷேட சமாதான தூதுவர் யசூசி அகாஷி என்னைச் சந்தித்த போதும் இதைக் கூறினார்.

முதலமைச்சர் பதவி பற்றிப் பேசுகிறார்கள். இங்கு ஆளுநர் மேலாதிக்கச் சக்தியை பிரயோகிக்கும் பொழுது முதலமைச்சரால் பெரிதாக எதையுமே சாதித்துவிட முடியாது.

இந்த நாட்டின் பழுத்த தொழிற்சங்கவாதியும், நபிகளாரின் வம்சத்தில் தோன்றியவரென கூறப்படுபவரும், தமது கட்சிக்காக வீதியில் இறங்கி அடியும், உதையும் வாங்கியவருமான அலவி மௌலானா, கிழக்கின் ஆளுநர் போல் அதிகாரத்தைப் பிரயோகிக்க அனுமதிக்கப்படுவதில்லை.

சிறுபான்மை சமூகங்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் காணி மற்றும் கல்வி அதிகாரங்கள் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த அமைச்சரின் பொறுப்பில் விடப்பட்டுள்ளனர்.

பதவி ஆசையில் நாம் அதிகாரத்தை புரிந்துகொண்டிருப்பதாக யாரும் கருதிவிடக்கூடாது. இது கட்சிப் போராளிகளுக்கு நன்கு தெரிந்த விஷயம். எஞ்சியுள்ள பத்து நாட்களில் வெற்றியை நோக்கிய எமது பயணத்தை குழப்பி அதில் குளிர்காய சில தீய சக்திகள் வழிபார்த்துக்கொண்டிருக்கின்றன. நாம் அவற்றுக்கு சோரம் போய்விடக்கூடாது.

வாக்களிப்பு வீதத்தைப் பொறுத்து பெறுகின்ற ஆசனங்களின் ஏற்ற, இறக்கங்கள் தங்கியுள்ளன. எமது மக்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சிகளில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

சலனங்கள் ஏற்பட்டால் தடுமாற்றம் ஏற்படுவது இயல்பு. கட்சியின் தலைவர் என்ற முறையில் நான் உச்சக் கட்ட பொறுமையை கையாண்டு வருகின்றேன். எனக்கு அதற்கான திறனை தருமாறு இறைவனை பிரார்த்தியுங்கள்.

எதிர்ப்பு அரசியல், இணக்க அரசியல், சரணாகதி அரசியல் என்பவை பற்றி ஏலவே கூறியிருக்கிறேன். முஸ்லிம் காங்கிரஸூக்கும், சரணாகதி அரசியலுக்கும் வெகு தூரம்.

யுத்தம் முடிந்த பின்னரும் நித்திரையில்லாத இரவுகளைப் பற்றி இவ்வாறான பிரதேசங்களில் வாழும் உங்களுக்குத் தெரியும்.

நில மீட்சிக்கான ஒரு முன்னெடுப்பின் அவசியம் நன்கு உணரப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளில் நாம் இறங்கியிருக்கிறோம்.

கிழக்கில் கையாலாகாத ஒரு பொம்மையாட்சி வேண்டுமா அல்லது அதிகாரங்களுடன் கூடிய நேர்மையான நல்லாட்சி வேண்டுமா? என்பதை தீர்மானிக்க வேண்டிய தேர்தலாக இது மாறியிருக்கிறது.

கள நிலவரங்களின் யதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் என்ற இந்த இயக்கம் மக்களுடையது. இதை களங்கமில்லாமல் அடுத்த சந்ததிக்கு ஒப்படைப்பது நம்மீது சுமத்தப்பட்டுள்ள பாரிய பொறுப்பாகும் என்றார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான ஹாபிஸ் நஸீர் அஹமத், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் முழக்கம் அப்துல் மஜீத் ஆகியோரும் இக் கூட்டத்தில் உரையாற்றினர்.
 
 
 


 

2 comments:

  1. அமைச்சர் சகோதரர் பஷீர் அவர்களுக்கு..
    நீங்கள் பல இடங்களில் கட்சியின் வெற்றிக்கு பல வியுகங்களை வரைந்தாக உங்களுடைய அண்மையை 3 மணித்தியால பேச்சில் சொல்லியிருந்தீர்கள், SLMC என்ற நிறுவனம் உங்களுக்கு MP என்ற உன்னத பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பல தடவை தேசியப்பட்டியல் மூலம் வழங்கியுள்ளது.

    அவ்வாறு வழங்கிய ஒரு நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 20,000 வாக்குகள் உள்ள ஏறாவூர் மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள (பெருபாண்மை ஆதரவைப்பெற்றுக் கொள்ள இது வரைக்கும் எந்த வியுகமும் வகுப்படாத ஒரு போலித்தன வியுகம்) என்னைப் பொருத்தமட்டில் கட்சிக்கு பாரிய வீழ்ச்சியை செலுத்தாது என்பதை என்னுடைய அபிப்பிராயம்.

    கடந்த கால அரசியிலில் எந்த வகையான அதிகாரமில்லாத ஒரு மௌலான அதில் கூடுதலான வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் போது பிரதியமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் என அங்கு சேவையாற்றிய இவரால் அங்குள்ள வாக்காளர்களை கவருவதற்கான எந்த வியுகம் வகுப்படவில்லை. அரசியலைப் பொருத்தமட்டில். வாக்காளர் வங்கி முக்கியமானது.

    குறிப்பாக மட்டக்களப்பு மாகாணத்தை பொறுத்தமட்டில், இவருக்கு வழங்கிய MP பதவியை ஓட்டமாவடி, வாழைச்சேனை போன்ற பகுதிகளுக்கு வழங்கியிருந்தால் அங்கு கிட்டத்தட்ட 20000 வாக்குகளை இலகுவான முறையில் கவர்ந்திருக்க முடியும். இது யாதார்த்தம். நன்றியில்லா ஊராக்கு நக்குக் கொடுப்பதை விட நன்றியுள்ளவனுக்கு கொடுத்தல் நலன் மற்றும் பலன் கிடைக்கும் என்பார்கள்.

    எதிர்காலத்தில் கட்சி தனது நிலையை மாற்றி காய் நகர்த்தினால் இலகுவான முறையில் வாக்கு வங்கியை வசிகரிப்பது பெரிய விடயமல்ல என்பதை சக மட்டக்களப்பு வாக்காளருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

    எது எப்படித்தான் இருந்தாலும். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நிலவரத்தின் படி ஒரு கட்சிக்கு 26000 வாக்குகள் இருந்தால் போதுமானது அதனை அதனை தொடர்ந்து முகாமைப்படுத்தினால் அங்கு ஏற்படக்கூடிய சில்லறையான பல பிரச்சினைக்கு தீர்வு கிட்டும். ஏனெனில் அங்கு முஸ்லிம்களுக்கான ஆசானம் ஒரு பாராளுமன்ற பிரதிநிதி மாத்திரம். என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும். அத்துடன் ஏதாவது தேசிய கட்சிகளின் வாக்கின் ஊடாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. உதாரணமாக இன்றைய நிலையில். இருப்பது போல.

    இறுதியாக…….. இறுதியாக அவர் சந்தோசப் பட வேண்டும் கடந்த தேர்தல் மூலம் மக்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டார். அந்த வியுகத்தை வகுத்தது கட்சி தலைமையாகும். இந்த வியுகம் தான் அவருடைய அரசியல் வாழ்வுக்கு மறுமலர்ச்சி அளித்த வியுகம் என்பதை சகலரும் அறிந்து கொள்ள வேண்டும்.

    எந்த தேர்தலிலும், தன்னால் சுயமாக வெற்றி கொள்ள முடியாத தனிப்ப வியுகத்தை வகுக்க முடியாதவர்கள் எவ்வாறு ஒரு தனித்துவமான கட்சிக்கு வியுவகம் வகுத்தி சென்றிப்பார்கள் என்பதை அறிய முடிகின்றது.

    தலைமை பல தடவை நெருப்பின் மேல் நடந்து மகிந்த மன்னருக்கும் சவால் விட்டு வந்துள்ள தலைமை இவைகள் யாவும் அற்பம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  2. ஏனைய இருமாகாணங்களில் வாழும் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் ஒன்றுபட்டு எந்த கட்சிக்கி வாக்களித்து சேரம் போகமல் பாதுகக்க கோறிக்கை விட்டு பேசுவதாக உதேசம் மரத்தின் மா தலைவரே?

    ReplyDelete

Powered by Blogger.