Header Ads



அமெரிக்காவின் அராஜகத்திற்கு இன்று வயது 67...

இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதுவே உலகின் முதலும், கடைசியுமான அணுகுண்டு தாக்குதல். இந்த தாக்குதல்களால், இரண்டாம் உலகப்போர், முடிவுக்கு வந்தது.

அணுகுண்டின் ஆரம்பம்: இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பானின் ஹிரோஷிமா மீது 1945, ஆக., 6ம் தேதி, அமெரிக்கா, அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது. “லிட்டில் பாய்' எனும் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்த அமெரிக்க விமானம், ஹிரோஷிமா மையப் பகுதியில், அணுகுண்டை வீசியது. இது 4 சதுர மைல் அளவுக்கு அழிவை ஏற்படுத்தியது. அப்போது ஹிரோஷிமாவின் மொத்த மக்கள்தொகை 3 லட்சத்து 50 ஆயிரம் பேர். 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இதில் இறந்தனர். கதிர்வீச்சால், பல்லாயிரக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டனர் (இதன் பாதிப்பு இன்னும் தொடர்கிறது). குண்டு வீசப்பட்டு 16 மணி நேரம் கழித்து, அமெரிக்க அதிபர் ஹாரிட்ரூமேன், ஜப்பான் மீது அணுஆயுத தாக்குதல் நடத்தியதாக அறிவித்தார். (அணுகுண்டை சோதித்து பார்க்க, இதை அமெரிக்கா செய்தது எனவும் கூறப்படுகிறது) இதன் பிறகே, ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டது, உலக நாடுகளுக்கு தெரியவந்தது.

மீண்டும் தாக்குதல்: மூன்று நாட்கள் கழித்து ஆக., 9ல், ஜப்பானின் நாகசாகி நகரின் மீது "பேட் மேன்' என்ற அணுகுண்டை 2வது முறையாக அமெரிக்கா வீசியது. இந்த தாக்குதல்களால் இரண்டு நகரங்களும் முற்றிலுமாக நிலைகுலைந்தன. கதிர்வீச்சால் இறந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தை எட்டியது. ஆறு நாட்கள் கழித்து, 1945 ஆக., 15ம் தேதி, சரணடைவதாக ஜப்பான் ஒப்புக்கொண்டது. அத்துடன் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. தற்போது இந்த நகரங்கள், அந்த சுவடே தெரியாத அளவு பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்தது, அந்நாட்டின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

மக்கள் எதிர்பார்ப்பது: அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா ஆகிய நாடுகள் அணுகுண்டு சோதனை நடத்தி, அணு ஆயுத நாடுகளாக காட்டியுள்ளன. இதைத்தவிர இஸ்ரேல் மற்றும் ஈரானும் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக அமெரிகக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. ஜப்பான் அழிவிற்கு பின், அணுகுண்டு தாக்குதல் உலகின் எந்த மூலையிலும் நிகழவில்லை என்பது வரவேற்கத்தக்க விஷயம். மக்கள் எதிர்பார்ப்பது, அணு ஆயுதம் இல்லாத உலகைத் தான்.

No comments

Powered by Blogger.