பள்ளிவாசல்களின் விபரங்களை திரட்டுகிறது சீ.ஐ.டி.
TM
முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல்களின் விபரங்களை குற்றப்புலனாய்வு பிரிவு கோரியுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திலேயே பள்ளிவாசல்களை பதிவு செய்ய வேண்டும். அனுமதியற்ற வழிபாட்டு தலங்கள் முறியடித்தல் மற்றும் மத ரீதியான மோதல்களை தடுப்பதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டிலுள்ள பள்ளிவாசல்களின் எண்ணிக்கை, அவற்றின் பெயர், பதிவு செய்யப்பட்டுள்ள காலம் உள்ளிட்ட பல தகவல்களை குற்றப்புலனாய்வு பிரிவு முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திடம் கோரியுள்ளது.
முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை சென்ற குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள், முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல்களின் விபரங்களை கோரியுள்ளனர்.
இந்த தரவுகள் திரட்டல் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்காகவே இடம்பெறுகின்றது என முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
எனினும் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையிலுள்ள அனைவரினதும் பெயர் முகவரி உள்ளிட்ட தகவல்களை குற்றப்புலனாய்வு பிரிவு கோரியதாக வெளியான தகவல்களை உயர் அதிகாரி நிராகரித்தார்.
இது தொடர்பில் புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளர் கசியொன் ஹேரத்தை தொடர்புகொண்டு வினவிய போது, குற்றப்புலனாய்வுப் பிரிவின் விஜயம் குறித்து தாம் அறியவில்லை என்றார். முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் இன்று வெள்ளிக்கிழமை காலை தன்னை சந்தித்தபோது இது தொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார். (யொஹான் பெரேரா)

Post a Comment