மன்னாரில் வயிற்றோட்டம் - சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு வலியுறுத்து
கடந்த சில தினங்களாக மன்னாரில் பரவிவரும் வயிற்றோட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கமைய ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொதித்தாறிய நீரைப் பருகுதல், பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டுள்ள உணவு வகைகளை உட்கொள்வதைத் தவிர்த்தல் மற்றும் உரிய சுகாதார பழக்க வழக்கங்களை கையாள்வதன் மூலம் வயிற்றோட்டம் பரவுவதை தடுக்க முடியும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை கடந்த 11 ஆம் திகதி தொடக்கம் இன்று வரை வயிற்றோட்டத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் பலர் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இவர்களில் 10 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஐந்து சிறுவர்களும் அடங்குவதாக அவர் கூறினார்.
மன்னார் நகரின் மூர்வீதி, சின்னக்கடை, உப்புக்குளம் ஆகிய பகுதிகளில் இருந்தே அதிகளவிலான நோயாளர்கள் மன்னார் வைத்தியசாலைக்கு வருகைதந்துள்ளனர்.
Post a Comment