Header Ads



பிறந்த மண்ணிலிருந்து உடுத்த துணியுடன் விரட்டியடிக்கப்பட்ட பலஸ்தீனரின் 64 ஆவது வருடம்

பிறந்த மண்ணில் இருந்து உடுத்த துணியுடன் விரட்டியடிக்கப்பட்ட துயர நிகழ்வின் 64-வது நினைவு தினத்தை(நக்பா) பலஸ்தீன் மக்கள் அனுஷ்டித்தனர்.

1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் என்ற யூத சியோனிச அரசு முஸ்லிம்களின் புண்ணியஸ்தலமான மஸ்ஜிதுல் அக்ஸாவின் மண்ணில் ஏகாதிபத்திய சதித்திட்டத்தின் ஒருபகுதியாக நிறுவப்பட்டதன் மரணிக்காத நினைவலைகளை பலஸ்தீன் மக்கள் தலைமுறைகளுக்கு பகிர்ந்து வருகின்றார்கள்.
 
ஒவ்வொரு ஆண்டும் மே 15-ஆம் தேதி நக்பா தினத்தையொட்டி பலஸ்தீன் மக்கள் காஸ்ஸாவிலும், ராமல்லாவிலும் இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களும், நினைவு நிகழ்ச்சிகளும் நடத்துவது உண்டு. ‘பாதுகாப்பின்’ பெயரால் இஸ்ரேல் கூடுதல் ராணுவத்தினரை நிறுத்துவதும் வழக்கமாகும்.

கிழக்கு ஜெருசலமில் இஸ்ஸாவியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களும், இஸ்ரேல் போலீசாரும் மோதலில் ஈடுபட்டனர். பொறுமையிழந்த மக்கள் போலீசார் மீது கல்வீசினர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

காஸ்ஸாவில் இருந்து தெற்கு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடந்ததாக போலீஸ் செய்தி தொடர்பாளர் மிக்கி ரோஸன்ஃபெல்ட் கூறுகிறார். மேற்குகரை நகரங்களான ராமல்லா, ஒஃபர், கலாந்தியா மற்றும் கிழக்கு ஜெருசலம், காஸ்ஸா ஆகிய இடங்களில் பிரம்மாண்ட பேரணிகள் நடைபெற்றன.

காஸ்ஸாவில் ஹமாஸின் பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா மக்கள் மத்தியில் உரைநிகழ்த்தினார்.

அரப்-இஸ்ரேல் போரும், இஸ்ரேலின் உருவாக்கமும் சின்னாப் பின்னப்படுத்திய ஃபலஸ்தீன் மக்களில் 47 லட்சம் பேருக்கு வீடு இல்லை என்பது தற்போதைய புள்ளிவிபரமாகும். 1,60,000 ஃபலஸ்தீன் மக்கள் இஸ்ரேலில் வசிக்கின்றனர். எல்லைப்புற நாடுகளிலும் இதே எண்ணிக்கையிலான மக்கள் வசித்து வருகின்றனர். மீதமுள்ளவர் காஸ்ஸாவிலும், ராமல்லாவிலும் வசிக்கின்றனர். இஸ்ரேலில் அரபு வம்சா வழியைச் சார்ந்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹயர் அரப் மானிட்டரிங் கமிட்டி பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. பலஸ்தீன் மக்கள் விரட்டியடிக்கப்பட்ட கிராமங்களுக்கு திரும்பச் செல்லவும் அழைப்பு விடுக்கப்பட்டது.

‘எமது தொடர்ச்சியான வேதனைகளின் ஆரம்பத்தை எம்மால் ஒருபோது மறக்க முடியாது’ என்று பலஸ்தீன நிர்வாகத்தின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் குறிப்பிட்டார். மேற்குக்கரை நகரான ரமல்லாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கறுப்புக்கொடி ஏந்தி ஊர்வலம் நடத்தினர். அந்த கறுப்பு கொடியில் ‘மீள்வோம்’ என ஆங்கிலம் மற்றும் அரபு எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனூடே அகதிகள் தமது சொந்த இருப்பிடத்திற்கு திரும்புவார்கள் என்பதை ஆர்ப்பாட்டக் காரர்கள் கூற முயன்றனர்.

சுமார் 5 மில்லியனுக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் தமது அடிப்படை உரிமையும் இன்றி அயல் நாடுகளான சிரியா, லெபனான், ஜோர்தான் மற்றும் காசா, மேற்குக்கரை பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் அகதி முகாம்களிலேயே வாழ்கின்றனர்.

காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பின் பிரதமர் இஸ்மையில் ஹனியான் கூறும்போது, ‘நாம் எமது நிலத்தின் உரிமையை பெறுவதை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்’ என்றார்.

No comments

Powered by Blogger.