Header Ads



சீனாவில் 'கை-கால்-வாய் காய்ச்சல்' - 20.000 குழந்தைகள் பாதிப்பு, 19 பேர் பலி

சீன நாட்டின் மத்திய பகுதியில் உள்ள ஹூனான் மாகாணத்தில் ""கை-கால்-வாய் காய்ச்சல்'' நோய் காரணமாக 19 குழந்தைகள் உயிரிழந்துவிட்டனர். 20,078 குழந்தைகள் இந்தக் காய்ச்சல் அறிகுறிகளோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அன்றாடம் 70 குழந்தைகள் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர்.

இந்தக் காய்ச்சலுக்கு பொதுவான ஊசி மருந்து கிடையாது. சுகாதாரமான நடைமுறைகள் மூலமே நோய் வராமல் தடுக்க முடியும். கடுமையான கோடைக் காலத்திலும் மழைக்காலத்திலும் இந்தக் காய்ச்சல் ஏற்படும். இது கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் போன்றது அல்ல ஆனாலும் அதே வகை வைரஸ் கிருமிகளால் ஏற்படுவது.

இந்த நோய் பாதித்த குழந்தைகளின் வாயைச் சுற்றிலும் உள்ளங்கை, உள்ளங்கால்களிலும் சிவப்பு கொப்புளங்கள் காணப்படும். இந்தக் கிருமிகள் குழந்தைகளின் குடலில் தங்கி 3 அல்லது 5 நாள்களுக்குள் வளர்ந்துவிடும். மழலையர் பள்ளி போன்ற இடங்களில் நோய்த்தொற்று ஏற்படும். ஒரு குழந்தைக்கு இந்த வைரஸ்கள் இருந்தால் சளி, மலம், வாய் எச்சில் மூலம் இன்னொரு குழந்தைக்குப் பரவும்.

முதியவர்களுக்கு அவர்களுடைய உடல் வலு காரணமாக தொற்றாது. ஆனால் உடல் நலிவுற்றவர்களாக இருந்தால் முதியவர்களையும் இந்தக் காய்ச்சல் விட்டுவைக்காது. இது தொற்றுநோய் என்பதால் முன் எச்சரிக்கை தேவை என்று உலக சுகாதார நிறுவனம் அனைவரையும் எச்சரிக்கிறது

No comments

Powered by Blogger.