Header Ads



வெள்ளவத்தையில் நடந்த பகற்கொள்ளை..! - நகையுடன் செல்லும் பெண்களே கவனம்..!!

கொழும்பு வெள்ளவத்தை காலி வீதியில் பட்டப் பகலில் பலரும் பார்த்திருக்க பெண்ணொருவரிட மிருந்து சுமார் இரண்டரை  இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்து பவுண் தங்க நகை மிகவும் தந்திரமாக அபகரிக்கப்பட்டுள்ளது.  வெள்ளவத்தை சபையர் ஹோட்டலுக்கு முன்பாக நடைபெற்ற இந்தத் துணிகரச் சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

காலி வீதியில் முற்பகல் 11 மணியளவில் அருத்துஷா லேனுக்கும் பெரேரா லேனுக்குமிடையே சென்ற தமிழ் பெண்ணொருவரை (52 வயது), பஞ்சாபி உடையணிந்திருந்த பெண்ணொருவர் வழி மறித்துள்ளார். தன்வசம் மாணிக்கக் கல் இருப்பதாகவும் அதைப் பார்க்குமாறும் கூறிய அந்தப் பெண் அதனைக் காண்பிக்க முற்பட்ட போது வீதியால் வந்த பெண் அவரை அலட்சியப்படுத்தி விட்டு அப்பால் சென்றுள்ளார்.

அவ்வேளை சற்று தள்ளி காலி வீதியில் சபையர் ஹோட்டல் முன்பாக நின்ற ஒருவர், வீதியால் வந்த அந்தப் பெண்ணை வழிமறித்து மாணிக்கக் கற்களுடன் அங்கே ஒரு பெண் நிற்பதாகவும் அவரிடமுள்ள கற்கள் பெறுமதியானவை எனவும் அவற்றை வாங்குமாறும் கூறியுள்ளார்.
இந்த நேரம், மாணிக்கக் கற்களை வைத்திருப்பதாக கூறிய பெண் அவர்களை நோக்கி வந்துள்ளார்.

இதற்கிடையில், வீதியால் வந்த பெண்ணை வழிமறித்தவர் தன்னிடமிருந்த  சிவப்புக் கல் ஒன்றை எடுத்து அவரிடம் காட்டியுள்ளார். அந்தக் கல்லோ கண்ணைப் பறிக்கும் வகையில் ஒளிர்ந்த அதேநேரம் அந்தக் கல்லை அவர் அந்தப் பெண்ணின் முகத்திற்கு அருகில் கொண்டு சென்று திருப்பிதிருப்பி காண்பித்துள்ளார்.

அந்தக் கல் சிந்திய ஒளி வெள்ளத்தில் தன்னை மறந்த இப் பெண் மூச்சுப் பேச்சின்றி ஒருவித மயக்கத்துக்குள் சென்று மெய்மறந்துள்ளார்.  அவரால்  எதுவுமே பேசவோ, அவ்விடத்தை விட்டு விலகிச் செல்லவோ முடியாது போய்விட்டது.எனினும் அங்கு என்ன நடக்கிறதென்பதையெல்லாம் அவரால் பார்க்கவும் உணரவும் முடிந்தது. ஆனால் பேசமுடியவில்லை.

இந்த நேரம் பஞ்சாபி அணிந்த அந்தப்பெண்ணும் அவரிடம் வந்து பெரிய குடை ஒன்றால் மறைத்தவாறு அவரது கையிலிருந்த தங்க மோதிரத்தை உருவியுள்ளார். அதை அந்தப் பெண் உருவுவது நன்கு தெரிந்தும் இவரால் அதனைத் தடுக்க முடியாது போனதுடன் எவரையும் உதவிக்கும் அழைக்க முடியாதுமிருந்துள்ளது.

இதன் பின் அவர் அணிந்திருந்த சங்கிலிகள் மற்றும் காப்புகளை அவரைக் கொண்டே அந்தப் பஞ்சாபி உடையணிந்த பெண்ணும் அவருடன் நின்றவரும் பெற்றுள்ளனர். எதுவித மறுப்புமின்றி இவரும் தனது நகைகளைக் கழற்றிக் கொடுத்துள்ளார்.

காலி வீதியில் மிகவும் நெரிசலான போக்குவரத்துக்கு மத்தியில் இது நடந்த போது பலரும் இவர்களைப் பார்த்தவாறு சென்றுள்ளனர். எனினும் இவர்கள் சுமுகமாக நடந்து கொண்டதால் எவரும் இதனை தப்பாக நினைக்கவில்லை.
இதனை இந்தப் பெண்ணின் உறவினர் ஒருவரும் பார்த்துச் சென்ற போதும் இவரால் எவரையுமே உதவிக்கு அழைக்க முடியாது போனதுடன் தன்னிடமிருந்து அவர்கள் நகைகளை அபகரிப்பது தெரிந்தும் எவரது உதவியையும் கோர முடியாதும் போய்விட்டது.

இவையெல்லாம் ஐந்து, பத்து நிமிடங்களுக்குள் நடந்து முடிந்ததுடன் இவரது நகைகளை அபகரித்தவர்கள் அங்கிருந்து உடனடியாக மாயமாகியும் விட்டனர். இவர்கள் இந்தியர்கள்.

மிக நீண்ட நேரம் மனக்குழப்பத்திற்குள்ளாகி எதுவுமே செய்ய முடியாத நிலையில் சுமார் ஒருமணி நேரத்தின் பின் தட்டுத் தடுமாறி ஒருவாறு வீடு வந்து சேர்ந்த இவருக்கு, அதன் பின் தான் தனக்கு நடந்தது பற்றி ஏனையவர்களுக்கு கூற முடிந்துள்ளது. எனினும் இவர் இதுபற்றி பொலிஸாரிடம் முறையிடவில்லை. இவரது உறவினர்களே இந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட அனுபவம் வேறு எவருக்கும் ஏற்படக்கூடாதென்பதற்காக அறியத்தந்துள்ளனர்.

1 comment:

  1. இதில் நிறைய சந்தேகங்கள் உள்ளன.
    ஏன் போலிசுக்கு போகவில்லை?

    மாணிக்கக் கல்லில் அப்படி என்னதான் இருக்கின்றது?
    விளக்கம், விசாரணை தேவை.

    ReplyDelete

Powered by Blogger.