Header Ads



சிந்திக்க மறந்த மக்கள் - நடிகைகளுக்காக ஏமாந்த 6000 இந்தியர்கள்

பெங்களூரில் ஏப்ரல் 1 ஆம் திகதி முட்டாள் தினத்தை யொட்டி எப்.எம்.சனல் ஒன்று 6 ஆயிரம் பேரை மலையேற வைத்து ஏமாற்றியுள்ளது. ஏப்ரல் முதல் திகதியான மற்றவர்கள் செய்தது போல் அல்லாமல் வித்தியாசமான முறையில் மக்களை முட்டாளாக்க பெங்களூரைச் சேர்ந்த எப்.எம்.சனல் ஒன்று முடிவு செய்தது. எனவே வித்தியாசமாக யோசித்து கடந்த வாரம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. தங்கள் எப்.எம். சனலின் புதிய ஸ்டூடியோ நந்தி ஹில்ஸ்சில் அமைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலையில் திறப்பு விழா நடக்கிறது.

இதில் பிரபல நடிகைகள் பிரியங்கா சோப்ரா, பிபாஷா பாசு, கத்ரினா கைப் உட்பட பிரபலங்கள் பலர் கலந்து கொள்கின்றனர் என்று அறிவித்தது. நந்தி ஹில்ஸ் பெங்களூரில் இருந்து 54 கி.மீ. தொலைவில் உள்ள சிக்பல்லபூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

இந்த ஹில்ஸ்சின்  உச்சியில் தான் புதிய ஸ்டூடியோ திறக்கப்போவதாக எப்.எம். சனல் அறிவித்தது. நடிகைகளை பார்க்கப் போகும் ஆர்வத்தில் மக்கள் சிந்திக்க மறந்தனர். ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 1 ஆம் திகதி அது முட்டாள்கள் தினம். அன்றைய தினத்தில் ஸ்டூடியோ திறக்கப் போவதாகவும் பிரபல இந்தி நடிகைகள் கலந்து கொள்ளப் போவதாகவும் எப்.எம். சனல் அறிவித்துள்ளதே. அது உண்மையாக இருக்குமா? முட்டாளாக்கும்  முயற்சியா? என்று உறுதிப்படுத்திக் கொள்ள பலரும் முயற்சிக்கவில்லை.

காலை 6 மணிக்கு நந்திஹில்ஸ் அடி வாரத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி விட்டனர். இந்த நந்திஹில்ஸ் (நந்திகுன்) தோட்டக் கலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. டிக்கெட் வாங்கிக் கொண்டு தான் மேலே செல்ல வேண்டும். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்தது. அலுவலகத்தை திறக்க வந்த தோட்டக் கலை துறை அதிகாரிகளுக்கு இவ்வளவு கூட்டத்தைப் பார்த்து ஆச்சரியம் ஏற்பட்டது.

பொதுவாக ஞாயிற்றுக்கிழைமைகளில் மற்ற நாட்களை விட சற்று அதிகமாக கூட்டம் இருப்பது உண்டு. ஆனால் சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு நேற்று கூட்டம் நீண்ட கியூவில் நிற்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார்கள். டிக்கெட் வாங்கிக் கொண்டு 6000  பேருக்கு மேல் நந்தி ஹில்ஸ்ன் உச்சிக்குச் சென்றனர். அங்கு போன பிறகு தான் இவர்களுக்கு தாங்கள் முட்டாளாக்கப்பட்டது தெரிந்தது. நந்தி ஹில்ஸ் உச்சியில் ஸ்டூடியோவும் இருக்கவில்லை. நடிகைகள் வருவதற்கான எந்த அறிகுறியும் இருக்கவில்லை.

தாங்கள் முட்டாளாக்கப்பட்டதை உணர்ந்த அவர்கள் ஏமாந்த விடயத்தை காட்டிக் கொள்ளாமல் ஒவ்வொருவராக அங்கிருந்து நகர்ந்தனர். இதில் விசேடம் என்ன வென்றால் பலர் குடும்பத்துடன் வந்திருந்தது தான். சாமானியர்கள் மட்டுமே ஏமாந்தனர் என்றில்லை. கல்லூரி மாணவர்கள் ,சொப்ட்வேயார் என்ஜினியர்கள், இளம் ஜோடிகள்  எனப் பல தரப்பினரும்  நடிகைகளைப் பார்க்கும் ஆர்வத்தில் வந்து ஏமாந்து போனார்கள்.

நுழைவுக் கட்டணம். வாகன நிறுத்தக் கட்டணம் என்ற வகையில் தோட்டக் கலை துறைக்கு மட்டும் 3 மணி நேரத்தில் ரூ. 70 ஆயிரம் வருமானம் கிடைத்தது. குறுகிய காலத்தில் அந்தப் பகுதியில் ஏராளமானோர் கூடியதால் ஹில்ஸ் பகுதியில் போக்குவரத்து பிரச்சினை ஏற்பட்டது. போக்குவரத்தை சீர்படுத்த பொலிஸார் மிகவும் சிரமப்பட்டு போனார்கள்.

1 comment:

Powered by Blogger.