Header Ads



வடக்கின் வளங்கள் அனைத்தும் தமிழ் மக்களுக்கு என்று சிலர் நினைக்கிறார்கள்

தற்போது நடைமுறையிலிருக்கும் தேசவழமைச் சட்டத்தை உடன் இரத்துச் செய்யவேண்டும் எனத் தெரிவித்த ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர், வடக்கில் இன்று ஏற்பட்டுள்ள காணிப் பிரச்சினைக்கு இந்தச் சட்டமே மூலக் காரணம் என்றும் கூறினார்.
 
இந்தச் சட்டத்தை இரத்துச் செய்வதன் மூலம் இலங்கை நாட்டிலுள்ள நம் அனைவரதும் காணிப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். அவர் இதுதொடர்பாக மேலும் கூறியவை வருமாறு,

இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்ந்தாலும், சிங்கள மக்களே பெரும்பான்மையின மக்களாக உள்ளனர். நம் அனைவரும்  இலங்கைப் பிரஜைகளே. வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களே செறிந்து வாழ்கின்றனர். இதனால் அந்த மாகாணத்திலுள்ள காணிகள் அனைத்தும் வடக்கு மக்களுக்கே சொந்தம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இது தவறாகும். ஏனென்றால் எமது பகுதியில் தமிழ் மக்களும் வாழ்கின்றனர். அங்கு சிங்களவர்களின் காணிகளைப் பிடித்துக்கொண்டு  தமிழர்களும், தமிழர்களது காணிகளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு சிங்களவர்களும் பேசுவதில்லை. போராடவும் மாட்டார்கள்.

எனினும், வடக்கில் அனைத்து வளங்களும் தமிழ் மக்களுக்கு மட்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். அவ்வாறு நாங்களும் நினைத்தால் எங்களது பிரதேசத்திலுள்ள தமிழ் மக்கள் எங்கே போவார்கள்? நாங்கள் அப்படிச் செய்வதுமில்லை.

கலாசாரம், பரம்பரை இரகசியங்களைப் பாதுகாப்பது அனைவரது உரிமைகளாகும். அதில் எவரும் தலையிட முடியாது. ஆனால் தமிழ் சிங்கள வேறுபாட்டுடன் செயற்படும் தமிழ்க் கட்சிகள் தங்களது வரட்டு கௌரவத்தை தணித்துக்கொள்ளவேண்டும் என்றார்

No comments

Powered by Blogger.