வடமாகாண அபிவிருத்திக்கு 170 மில்லியன் அவசர ஒதுக்கீடு
வடபகுதியில் துரித அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவென 170 மில்லியன் ரூபா நிதி உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.யாழ்ப்பாண மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த நிதி ஒதுக்கீடு தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் வடமாகாணசபை நிதியிலிருந்து 100 மில்லியன் ரூபாவும், ஆளுநர் நிதியிலிருந்து 70 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதுடன், கிளிநொச்சி வீதி அபிவிருத்தித் திட்டத்துக்கு ஆளுநர் நிதியிலிருந்து 50 மில்லியன் ரூபாவும், இடம்பெயர்ந்த மக்களுக்கான கூரைத்தகடுகளைப் பெற்றுக்கொடுக்கும் திட்டத்துக்காக இரண்டு மாவட்டங்களுக்கும் தலா 10 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டிருப்பதாகத் அவர் தெரிவித்தார்.
மீள்குடியேறிய மக்களின் நலன்கள் குறித்து பிரதேச செயலாளர்கள் உரிய கவனம் செலுத்துவது அவசியம் என இங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார். அடுத்த யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கிளிநொச்சியில் நடத்துவதற்கும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது.
Post a Comment