Header Ads



சோமாலியாவுடன் இலங்கையை ஒப்பிடுகிறார் ரணில்

17 ஆவது அரசமைப்பை அரசு நடைமுறைப்படுத்தாவிட்டாலும் சட்டம், அரசு மீது மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பச் சுயாதீனமான பொறிமுறையொன்றை அரசு ஏற்படுத்த வேண் டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு,

இன்று நாட்டில் மக்களும், பொலிஸாரும் சட்டத்தைக் கையில் எடுப்பதன் மூலம் ஜனநாயகத்துக்குச் சவால் ஏற்பட்டுள்ளது. சட்ட வரையறைகள் இன்று சீராக அமுல்படுத்தாததினால் மக்கள் சட்டத்தை கையில் எடுத்து தீர்வுகாண முயற்சிக்கின்றனர். சோமாலியாவில் ஆட்சியிலிருந்த அரசு சட்டத்தை சீராக அமுல்படுத்தாமையால் அங்கு குழப்பம் ஏற்பட்டது. ஆனால், இலங்கையில் அரசு ஆட்சியில் இருந்தபோதிலும், சட்டம் மற்றும் சட்டவரையறைகள் அமுலில் இல்லை. 

17 ஆவது அரசமைப்பு இரத்து செய்யப்பட்டுள்ள போதிலும் சட்டத் துக்குத் தேவையானவைகள் நிறைவேற்றப்படவில்லை.  கட்டுநாயக்காவில் மக்கள் சட்டத்தைக் கையில் எடுத்தனர். யாழ்ப்பாணத்தில் கிறீஸ் மனிதன் பிரச்சினையிலும்,  திருகோணமலையிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அம்பாறையில் இதனால் அப்பாவிப் பொலிஸ் உத்தியோகத்தரது உயிர் பிரிந்தது.

அதேபோன்று மொரட்டுவப் பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை செய்யப்பட்டார். ஆனால், அவர் சீருடை அணிந்திருக்கவில்லை. காரணம் மொறட்டுவ பொலிஸில் இவருக்கு சீருடை வழங்கப்படவில்லை. தொடர்ந்து பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது.ஏன் இவற்றை அரசியல்படுத்த முனைகிறார்கள் எனத் தெரியவில்லை. கொலன்னாவைச் சம்பவத்தில் முன்னால் எம்.பி. பாரத பலியானார். துமிந்த சில்வா எம்.பி. படுகாயமடைந்தார். ஏன் இப்படியான சம்பவம் இடம்பெறுகிறது. கொலன்னாவை மற்றும் வெல்லம்பிட்டிய பொலிஸார் தங்களது கடமைகளை சரிவர நிறைவேற்றி இருந்தால் இப்படியான சம்பவங்கள் இடம்பெற்றிருக்காது.

அத்துடன், அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் விசாரித்துள்ளனர். அமைச்சரை அல்ல லக்ஷ்மன் ஹுலுகல்லவையையே விசாரிக்க வேண்டும். நாடாளுமன்றத்திற்கு என்ன செய்யமுடியும் என மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை ஏற்பட்டு வருகின்ற வேளையில், முல்லேரியா சம்பவம் குறித்து அமைச்சர் ஒருவருடன் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதனால் 17ஆவது அரமைப்பை நடைமுறைப் படுத்தப்படாவிட்டாலும் சட்டம் அரசு மீது மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப சிறந்த பொறிமுறையொன்றை அரசு நடைமுறைப்படுத்தவேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.