யாழ் பல்கலைக்கழகத்தில் ராகிங் - முஸ்லிம் மாணவர் அச்சம்
யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள், புதுமுக மாணவர்கள் மீது தொடர்ந்தும் ராகிங் என்ற போர்வையில் தாககுதல் நடத்திவருவதாக முறையிடப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக யாழ் பல்கலைக்கழகத்தில் ராகிங் என்ற சாக்கில் வன்முறை ரீதியான தாக்குதல்கள் புதுமுக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்படுவது அதிகரித்திருப்பதாக மாணவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழகங்களில் ராகிங் முழுமையாகத் தடைசெய்யப்பட்டிருப்பதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்திருந்தும், யாழ் பல்கலைக்கழகத்தில் மோசமான ராகிங் கலாசாரம் நிலவுவதாக புதுமுக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் புதுமுக மாணவர் ஒருவருக்கு சிரேஷ்ட மாணவர் கன்னத்தில் அறைந்ததில் அவரது செவிப்பறை வெடித்து தற்போது அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல மாணவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும், அச்சம் காரணமாக அவர்கள் இதுபற்றி வெளியில் தெரிவிக்காமல் மௌனமாக இந்த ராகிங் கொடுமைகளைச் சகித்து வருவதாகவும் மாணவ வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. அதிலும், புதுமுக மாணவிகள் மீது மிகவும் பாலியல் வக்கிரம் நிறைந்த ராகிங் நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை யாழ் பல்கலைகழகத்திற்கு தென்னிலங்கையைச் சேர்ந்த புதுமாணவர்கள் அதிகம் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ராக்கிங் குறித்து அவர்களும் அச்சமடைந்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பள்ளிவாசல்கள் மற்றும் அமைப்புக்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் முஸ்லிம் மாணவர் விவகாரத்தில் ஆர்வமற்றுச் செயற்படுவவதாக அங்கு கல்விகற்கும் முஸ்லிம் மாணவி ஒருவர் யாழ் முஸ்லிம் வலைத்தளத்திற்கு அண்மையில் தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கது.

Post a Comment