35 ஆயிரம் இலங்கையரின் இரட்டை பிரஜாவுரிமை மீள்பரிசீலனை
வெளிநாடுகளில் நிரந்தர வதிவிட உரிமை பெற்று வாழும் இலங்கையர்களில் 35,000 பேருக்கு தாய் நாட்டில் வழங்கப்பட்டு இருந்த இரட்டைப் பிரஜாவுரிமை மீள்பரிசீலனை செய்யப்படுகின்றது.
இலங்கையில் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. தாய் நாட்டுக்கு விசுவாசமாக இருக்கின்றமையுடன் தாய் நாட்டின் சட்டங்களை மதித்து ஒழுங்காக வரிகளை செலுத்தி வருபவர்கள் மாத்திரமே இரட்டைப் பிரஜாவுரிமையைப் பெற உரித்துடையவர்கள் ஆவர் என்று இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் டபிள்யூ. ஏ. சூலானந்த பெரேரா தெரிவித்து உள்ளார்.
1987 ஆம் ஆண்டின் இரட்டைப் பிரஜாவுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது என்றும் எவருக்கேனும் வழங்கப்பட்டிருக்கும் இரட்டைப் பிரஜாவுரிமையை தகுந்த காரணங்களின் அடிப்படையில் எந்நேரத்திலும் இல்லாமல் செய்கின்றமைக்கு பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது என்றும் இவர் கூறினார்.
தாய் நாட்டின் இறைமை, ஐக்கியம், ஆள் புல ஒற்றுமைப்பாடு ஆகியவற்றுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றவர்களும் இரட்டைப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்து வந்து இருக்கின்றார்கள் என்றும் இந்நிலையிலேயே மீள்பரிசீலனை முடுக்கி விடப்பட்டு உள்ளது என்றும் இவர் குறிப்பிட்டார்.

Post a Comment