Header Ads



ஹொஸ்னி முபாரக் குறித்து புதுத் தகவல்கள்


தனது கடைசி உரையை முடித்து விட்டு, கெய்ரோவில் இருந்து வெளியேறிய எகிப்து முன்னாள் அதிபர் முபாரக், கோமா பாதிப்பிற்கு உள்ளானது , அவரது இரு மகன்களுக்குள் நிகழ்ந்த அடிபிடி சண்டை, முபாரக்கின் சொத்துக்கள் வளைகுடா நாட்டுக்கு மாற்றப்பட்டது என, முபாரக் பற்றி பல்வேறு புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

கடந்த 11ம் தேதி, எகிப்து அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக், பதவி விலகுவதாக முடிவு செய்து அதற்கேற்ப ஓர் உரையைத் தயாரித்து வைத்திருந்தார். இந்தத் தகவலை மோப்பம் பிடித்த அமெரிக்க அதிகாரிகள், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்குத் தெரிவித்தனர். அன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் அவர்,"எகிப்தில் வரலாறு மலரப் போகிறது' என்று முபாரக்கின் விலகலை சூசகமாகச் சுட்டிக் காட்டினார்.

அடிபிடி சண்டை: இதற்கிடையில், அதிபர் மாளிகையில் முபாரக்கின் இரு மகன்கள் அலா மற்றும் கமாலுக்கு இடையில் தந்தையின் நிலை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. முபாரக் கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலராக கமால் இருந்த போது, தன் நண்பர்கள் பலருக்கும் தொழில்துறையில் சட்டவிரோதமாக தொழில் துவங்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். இதுதான் நாட்டை ஊழலுக்கு இட்டுச் சென்றது என்று அலா குற்றம்சாட்டினார்.

"தந்தையின் இறுதி நாட்களில் நேர்மையான முறையில் அவருக்கு உதவிகரமாக இல்லாமல், இப்படிச் செய்ததால் அவரது புகழையும் குலைத்து விட்டாய்' என்று சாடினார். வாக்குவாதம் முற்றி இருவருக்கும் அடிபிடி சண்டை ஏற்பட்டது. அங்கிருந்த ராணுவ தளபதிகள் சிலர் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர். இதையடுத்து பதவி விலகப் போவதாக உரை எழுதி வைத்துள்ளார் தந்தை என்று கேள்விப்பட்ட கமால், அவருடன் பேசி, செப்டம்பர் வரை பதவி விலகப் போவதில்லை என்று பேச சம்மதிக்க வைத்தார்.

இதில் முபாரக்கின் உதவியாளர்கள் உண்மை நிலவரத்தை எடுத்துரைத்தும் பலனில்லை. தொடர்ந்து தான் பதவியில் நீடிக்கப் போவதாக முபாரக் அறிவித்ததும் நிலவரம் மோசமானது. ராணுவம் முபாரக்கை "பேக் அப்' செய்தது.

கோமாவில் முபாரக்: எகிப்தின் மற்றொரு பகுதியான சினாய் தீபகற்பத்தில் செங்கடல் ஓரத்தில் உள்ள ஷரம் எல் ஷேக்கில் முபாரக்கிற்குச் சொந்தமாக ஒரு மாளிகை உள்ளது. 11ம் தேதி இரவு முபாரக் தனது குடும்பத்துடன் அங்கு வந்து சேர்ந்தார்.

மறுநாள் முழு கோமாவில் விழுந்து விட்டார். தற்போது அங்கேயே அவருக்கு சிகிச்சை நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், அதேநாள், தனது நாட்டு வங்கிகளில் உள்ள முபாரக்கின் கணக்குகளை சுவிட்சர்லாந்து அரசு முடக்கியது.

சொத்துக்கள் மாற்றம்: இதைத் தொடர்ந்து முபாரக்கின் நிதி ஆலோசகர்கள், ஐரோப்பிய நாடுகளில் உள்ள அவரது வங்கிக் கணக்குகளை, வளைகுடா நாடுகளுக்கு உடனடியாக மாற்றி விட்டனர். எனினும் எகிப்து அரசு நிறுவனங்களில் பல்வேறு விதங்களில் முபாரக் குடும்பத்துக்கு பங்குகள் உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

அவரது சொத்து மதிப்பு மூன்று லட்சம் கோடி இருக்கலாம் என முதலில் தகவல்கள் தெரிவித்தன. ஆனால் அமெரிக்க அதிகாரிகள் அதை மறுத்து, 13 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் மட்டுமே அவருக்கு சொத்து மதிப்புகள் இருக்கக் கூடும் என்று கணக்கிட்டுள்ளனர்

No comments

Powered by Blogger.