Header Ads



வீதியில் செல்வோருக்கு 21ம் திகதி முதல் புதிய நடைமுறைகள்

பாதசாரிகள் வீதி ஒழுங்குகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் இல்லையானால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுமென்றும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

பாதசாரிகள் பாதுகாப்பாக வீதியில் செல்வதற்கு மேல் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான வீதிகள் இப்போது நடைபாதைகள் அமைக்கப்பட்டி ருப்பதனால் அவர்கள் இனிமேல் வீதிகளில் செல்லும் வாகனங்களுக்கு தடையாக வீதியில் நடந்து சென்றால் அல்லது மஞ்சள் கோட்டைத் தவிர மற்ற இடங்களில் வீதியைக் கடந்தால் பாதசாரிகளுக்கு எதிராக பொலிஸார் கடும் நடவடிக்கையை எடுப்பார்கள்.

இந்த நடைமுறை இம்மாதம் 21ம் திகதி முதல் பொலிஸார் கடுமையாக அமுலாக்கவுள்ளார்கள். பாதசாரிகளே நாட்டில் நடைபெறும் வீதி விபத்துக்களில் சுமார் 50 விகிதத்திற்கு காரணமாக இருக்கிறார்கள் என்று பொலிஸ் திணைக் களம் சேகரித்துள்ள புள்ளி விபரங்கள் மூலம் தெரிவந்துள்ளது.

இவற்றைவிட துவிச்சக்கரவண்டிகளில் செல்பவர்களுள் வீதியோரமாக பயணம் செய்வதற்கு பதில் வீதியின் நடுவில் செல்வதனாலும், திடீரென்று குறுக்குப் பாதைகளில் இருந்து பிரதான பாதையில் நுழைவதனாலும் வீதி விபத்துக்கள் அதிகமாக இடம்பெறுவதாக பொலிஸார் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

துவிச்சக்கர வண்டிகளில் செல்பவர்கள் ஒரே வரிசையாக சரிசமமாக பிரயாணம் செய்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டு செல்வதனா லும் அவர்களுக்கு பின்னால் வரும் வாகனங்கள் தங்கள் வேகத்தைக் குறைக்க முடியாத காரணத்தினால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இரவில் விளக்குகள் இன்றி செல்லும் துவிச்சக்கரவண்டிகளில் செல்பவர்க்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள். இவை பற்றி தகவல் தெரிவித்த மேல் மாகாணத்தில் வாகனப் போக்கு வரத்துக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் மா அதிபர் அசோக்கா விஜயதிலக்க, இவ்விதம் தற்போது மேல்மாகாணத்தில் பாதசாரிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் விரைவில் நாடெங்கிலும் விஸ்தரிக்கப்படும் என்று கூறினார்.

இவ்விதம் குற்றமிழைப்பவர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் 5000 ரூபாவிற்கு அதிகமாக அபராதத் தொகையை விதிக்குமென்றும் கூறினார்.

No comments

Powered by Blogger.