Header Ads



நாளைய அமைச்சரவையில் ஆராயப்படவுள்ள, எரிபொருட்களின் விலை அதிகரிப்பு


அதிகரித்த எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்வது தொடர்பில் நாளைய தினம் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக ஆளும் கட்சியின் உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிராக பல்வேறுபட்ட தரப்பினரால் முன்வைக்கப்படும் எதிர்ப்புகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவை நாளை (14) பிற்பகல் 5 மணியளவில் ஒன்றுக் கூடவுள்ளது.

கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.

இதன்படி, 92 ரக ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 20 ரூபாவினாலும், 95 ரக ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 23 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டன.

அதேநேரம், ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 7 ரூபாவினாலும், சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 12 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் 7 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டன.

எனினும், அதிகரித்த எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆளும் தரப்பு சார்பிலே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இவ்வாறான பின்னணியில் கனிய எண்ணெய் அமைச்சில் விசேட கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இந்நிலையில், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சகல கருத்துக்களும் நாளை (14) இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது கவனத்தில் கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.