Header Ads



கல்முனையில் நாளுக்குநாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


- பாறுக் ஷிஹான் -

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (15) வரை 194 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் Covid- 19 கொரோனா தொற்றாளர்களின் விபரங்களை  ஊடகங்களுக்கு  தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கூறுகையில், கல்முனைப் பிராந்தியத்தில் தற்போது நாளுக்குநாள் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகின்றன.

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 14 தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் உயிரிழப்புக்கள் இடம்பெறுவதை தவிர்க்க வேண்டுமாக இருந்தால் பயணத் தடை அமுல் படுத்தப்பட்டுள்ள காலப் பகுதியில் பொதுமக்கள் பொறுப்புடன், சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தல்களை முழுமையாக கடைப்பிடிப்பது அவசியமாகும்.

இதுவரை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் கொரோனா தொற்றின் காரணமாக 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் முதலாவது அலையில் இரண்டு தொற்றாளர்கள் மாத்திரம் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் அலையில் 1468 தொற்றாளர்களும், மூன்றாவது அலையில் 577 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரை 17621 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் 23778 நபர்களுக்கு அன்ரிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.


1 comment:

  1. தொழிலார்கள் அல்ல தொற்றாளர்கள்

    ReplyDelete

Powered by Blogger.