Header Ads



முடக்கத்தினாலும், வெள்ளத்தினாலும் அதிக அசௌகரியங்களை எதிர்நோக்கும் காத்தான்குடி


- எம்.ஐ.அப்துல் நஸார் - 

கோவிட்-19 தொற்று பரவல் அதிகரித்துள்ளதனால் காத்தன்குடி பிரதேச செயலாளர் பிரிவு எதிர்வரும் 15 ஆந் திகதி வரை முடக்கப்பட்டுள்ளது. 

இந்த முடக்க நிலை காரணமாக அன்றாடத தெழிலில் ஈடுபடும் அஙகாடி வியாபரிகள், வர்த்தகர்கள் மீனவர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் தமது வாழ்வாதாரததிற்கான வழிகளை இழந்துள்ளதோடு வறுமை நிலைககுத் தள்ளப்பட்டுள்ளனர். 

கடந்த 30.12.2020 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது எதிர்வரும் ஐந்து தினங்களுக்கு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு தனிமைப்படுத்தல் முடக்கம் செய்யப்படுகிறது என அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலனிக் கூட்டம் டிசம்பர் 30 ஆந் திகதி மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 

காத்தான்குடி பிரதேசத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட 665 ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளின் போது 27 நபர்கள் இணங்காணப்பட்டனர். இத் தொற்றாளர்களும், இவர்களுடன் நேரடித் தொடர்புடையவர்களும் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது..

இதனையடுத்து கடந்த 31 ஆந் திகதி மட்டக்களப்பு நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் 3 தினங்களுக்கு மூடப்படுவதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவனினால் அறிவிக்கப்பட்டது. 

கடந்த 01 ஆந் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி நகர சபை பிரிவில் தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

காத்தான்குடி நகரப் பிரதேசம், கொவிட்-19 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவரும் ஆதார வைத்தியசாலை பிரதேசம் மற்றும் மக்கள் ஒன்றுகூடும் இடங்கள் போன்றவை இதன்போது தொற்று நீக்கம் செய்யப்பட்டன. 

கடந்த 05 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை காத்தான்குடி பிரதேசத்தில் 147 பேரில் மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் 7 பேருக்கு தொற்று உறுதி செயயப்பட்டது.  

காத்தான்குடி பரீட் நகர் மனாருல் ஹுதா பள்ளிவாயல், 6ஆம் குறிச்சி ரகுமா பள்ளிவாயல், ஜாமிஉல் ழாபிரீன் ஜும்ஆப் பள்ளிவாயல், மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் போன்ற பள்ளிவாயல்களை மையப் படுத்தி தற்போது அண்டிஜன் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன. பொதுமக்களும் பள்ளிவாயல்களும் இப் பரிசோதனைகளுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றனர் 

கடந்த 5 ஆம் திகதி காத்தான்குடிக்கான முடக்க நிலை எதிர்வரும் 15 ஆந் திகதி வரை நீடிக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் அறிவிக்கப்பட்டது. 

காத்தான்குடி பிரதேச செயலகத்தினாலும் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. 

காத்தான்குடி நகரம் கொரோனா தொற்றின்  காரணமாக பொது மக்களின் சுகாதார நலன் கருதி கடந்த ஒரு வார காலமாக பூரண முடக்கம் பிரகடனப்படுத்தப்பட்டு இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இருந்தபோதிலும் கடந்த நாட்களாக எமது பிரதேசத்தில் எடுக்கப்படுகின்ற அன்டிஜன் பரிசோதனையின்படி தொடர்ச்சியாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது மிகப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது மிக அவசியமான சுகாதார நடைமுறைகளை பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.

எனவேதான் இவ்வாறான தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு தொடர்ச்சியாக காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் முடக்க நிலையினை முறையாக பின்பற்றப்படாமையினை எல்லோராலும் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டதுடன் இது சம்மந்தமாக இன்றைய மாவட்ட செயலக கூட்டத்திலும் கலந்தாலோசிக்கப்பட்டது.  

அதனால்  இன்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில்  சில இறுக்கமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது.

இதனால் இன்று இரவிலிருந்து மிகக் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.   

வீட்டைவிட்டு அனாவசியமாக வெளியேறல்.

தேவையற்ற நடமாட்டம்

என்பன கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.                 

நாட்டின் பிற மாவட்டங்களில் இவ்வாறான நிலை காணப்பட்டதனாலேயே பிரதேச முடக்கம் வாரங்கள் கடந்து மாதங்களாக நீண்டமையை நாமறிவோம்.

எனவே  அனுமதியின்றி வீதியில் நடமாடுகின்றவர்கள் வீட்டுக்கு வெளியே வருகின்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு போலீசாருக்கு  இறுக்கமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.

அத்தோடு அனுமதியின்றி வெளியில் வாகனங்களில் நடமாடுகின்றவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமை ஆக்கப்படும்.

அனுமதியின்றி கடைகளைத் திறந்து வியாபாரம் செய்கின்றவர்களுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இன்று  இரவிலிருந்து முழுமையான இராணுவ  பாதுகாப்பு நடைமுறைகளும் எமது பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது.

இவ் நடைமுறைகளை பின்பற்றாத பட்சத்தில் வருகின்ற வாரங்களில் கூட எமது பிரதேசத்தில் சாதாரண வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது துரதிர்ஷ்டவசமான நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.              

எனவே, எமது பிரதேசத்தின் பொருளாதார நிலையினைக் கருத்தில் கொண்டும் எமது மக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொது முடக்கத்துக்கு பூரணமான ஒத்துழைப்பினை தருமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.  

        மூகப் பொறுப்பு சகலருக்கும் உண்டு என்பதனையும், நாம் தொற்றுக்குள்ளாகாமலும் பிறரையும் தொற்றுக்குள்ளாக்காமலும் செயற்பட்டு பொறுப்புடன் நடந்துகொள்வோம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனிடையே கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக காத்தான்குடி பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.. வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பல குடும்ங்கள் வெள்ள நீருக்குள்ளேயே இருக்கின்றனர். சில குடும்பங்கள் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். 

கடந்த 1, 2, 3 ஆந்டிதிகதிகளில் பெய்த இடிடிமின்னலுடன் கூடிய அடைமழை காரணமாக மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நகரில் 1 ஆம் திகதி 16.2 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சியும் 2 ஆம் திகதி 17.5 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சியும் பதிவாகியது.

நீரேந்து பிரதேசங்களை அண்டிய மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான க.கருணாகரனும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளும்;, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகள் கடந்த 1 ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்டது 

இவ் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தல் மற்றும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


1 comment:

  1. Nivarana pani onrum kudukkala engalukku ethu summa peela

    ReplyDelete

Powered by Blogger.