முடக்கப்பட்ட ராஜாங்கனை பகுதியின் போக்குவரத்து தடை நீக்கம் - தபால் மூல வாக்கெடுப்பு நாளை
நேற்று மாலை முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பிரதேசங்களுக்கான போக்குவரத்து தடை உத்தரவு நீக்கப்பட்டதாக ராஜாங்கனை சுகாதார வைத்திய அதிகாரி சந்தியா அபேரத்ன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் சிறிமாபுர, யாய 1 கிராமத்தின் ஒரு பகுதி மற்றும் யாய 2 கிராமத்தின் ஒரு பகுதி இவ்வாறு போக்குவரத்து தடை நீக்கப்பட்டுள்ளது.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கடமையாற்றிய ராஜாங்கனை பகுதியை சேர்ந்த ஆலோசகர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானதை அடுத்து கடந்த 12 திகதி முதல் குறித்த பகுதியில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டிருந்தது.
குறித்த நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
அதனடிப்படையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தில் எந்தவொரு நபரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகாத காரணத்தால் இவ்வாறு போக்குவரத்து தடை நீக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒத்திவைக்கப்பட்டிருந்த ராஜாங்கனை பிரதேச செயலாளர் பிரிவிற்கான தபால் மூல வாக்கெடுப்பு நாளை இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் போக்குவரத்து தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து இவ்வாறு நாளை தபால் மூல வாக்கெடுப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment