Header Ads



பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள முடியாது - மஹிந்த அமரவீர

தற்போதைய சூழ்நிலையில் பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள முடியாது எனவும், அதற்குப் பதிலாக சலுகைகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கவனத்தில் கொள்ள முடியும் எனவும் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தனியார் பஸ் உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காலத்தின் பின்பும் தற்போது மக்கள் பொதுப் போக்குவரத்து பஸ்களை அதிகமாக உபயோகப்படுத்தாத நிலை காணப்படுகின்றது எனவும், சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளுக்கு இணங்க பஸ்களில் பயணிகளை உள்ளடக்குவதாலும் தமக்கான வருமானம் பெரிதும் குறைந்துள்ளது எனவும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள் போக்குவரத்து அமைச்சரிடம் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளன.

இந்தநிலையில் அது தொடர்பில் அமைச்சில் இடம்பெற்ற விசேட பேச்சின் போதே அமைச்சர்மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை என்றும் மேற்படி சங்கத்தினர் அமைச்சரின் கவனத்துக்கொண்டு வந்தனர்.

எவ்வாறெனினும் கொரோனா வைரஸ் காரணமாக நாட்டின் தற்போதைய நிலையில் அனைத்துத்துறைகளும் வருமானத்தை இழந்துள்ள நிலையில் பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வது உகந்ததல்ல.

அது தொடர்பில் தாமோ அல்லது அரசோ உடன்படப் போவதில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ் துறையைப் பாதுகாப்பதற்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. லீசிங் மற்றும் காப்புறுதி அறவீட்டுக்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டதுடன் இலகுவட்டியில் கடன்களைப் பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மேலும் நிவாரணங்கள் அவசியமெனில் அது தொடர்பில் பேச்சு நடத்தத்தாம் தயார் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.