என்னை புலிகள் அச்சுறுத்தினர், அமெரிக்க குடியுரிமை இருந்தாலும் இலங்கையிலே மரணிக்க விரும்புகிறேன் -ரட்னஜீவன் ஹூல்
இரட்டை குடியுரிமையை கொண்டுள்ளதால் நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு தனக்கு இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உப பீடாதிபதியாக இருந்த போதே நான் நாட்டை விட்டு சென்றேன். 2006 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினேன்.
பின்னர் 2011 ஆம் ஆண்டு மஹிந்த ஆட்சியின் போது நடைபெற்ற தேர்தலில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து பேசியதால் அப்போதைய அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு இலக்கானேன்.
எனவே தான் நான் இரட்டை குடியுரிமையை பெற்றேன். ஆதனால் நாட்டை விட்டு இரண்டாவது தடவையாகவும் சென்றேன்.
இருப்பினும் இலங்கையில் வசித்து, இறப்பதே எனது ஆசை. இப்போதும் அமெரிக்காவுக்கு செல்வோம் என்று என் குடும்பத்தார் கூறுகின்றனர். ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லை.
நான் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக பத்திரிகை ஒன்றில் எழுதப்படுகின்றது. அப்படி சொல்லப்படும் போது சிங்கள மக்கள் அதை நம்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மற்ற பக்கத்தில் தமிழர்கள் என்னை ஒரு தேசியத்திற்கு எதிரான ஒருவாராகவே பார்ப்பர். அப்படி எல்லோருக்கும் இடையில் அவப்பெயரை சம்பாதித்துக் கொண்டு வாழ்வது துக்கம். சுரியான துக்கம் எனவும் தெரிவித்தார்.
Post a Comment