அமெரிக்காவில் மற்றுமொரு கருப்பின, இளைஞரை சுட்டுக் கொன்ற பொலிஸ்
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கருப்பின இளைஞர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களின் கொந்தளிப்பை அடுத்து, அட்லாண்டா காவல்துறைத் தலைவர் சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குள் ராஜினாமா செய்துள்ளார்.
காவல்துறைத் தலைவரின் ராஜினாமா தகவலை நகர மேயர் Keisha Lance Bottoms உறுதி செய்துள்ளார்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் மாகாண விசாரணை குழு பகீர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருப்பதாகவும், கடந்து செல்லும் பாதையைத் தடுக்கும் வகையில் காரில் ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பதாகவும் வெள்ளிக்கிழமை இரவு உணவகம் ஒன்றில் இருந்து அட்லாண்டா பொலிசாருக்கு புகார் சென்றுள்ளது.
புகாரையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த அட்லாண்டா பொலிசார், அந்த இளைஞர் நிதானமாக இருக்கிறாரா என்ற சோதனையில் தோல்வியடைந்ததாகவும், பின்னர் அதிகாரிகள் அவரை கைது செய்ய முயன்றதால் போராடத் தொடங்கியதாகவும் கூறுகின்றனர்.
இதனிடையே பொலிசாரிடம் இருந்து தப்ப முயன்ற 27 வயது Rayshard Brooks என்ற கருப்பின இளைஞர் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் காட்டுத்தீயாக பரவிய நிலையில், சம்பவம் நடந்த உணவகம் முன்பு சுமார் 50 பேர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது அட்லாண்டா முழுவதும் நொடியிடையில் வியாபித்த நிலையில், இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று காவல்துறைத் தலைவர் ராஜினாமா செய்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய பொலிசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண ஆளுநர் உறுதி அளித்துள்ளார்.
Post a Comment