வெளிநாட்டிலிருந்துபோதைப்பொருள் கடத்தும் வர்த்தகரின் வங்கிக்கணக்கில் 12 கோடிரூபா
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருட்களை அனுப்பும் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான 12 கோடி ரூபா வைப்பிலுள்ள வங்கித் கணக்கொன்றை கண்டறிய முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மினுவங்கொடை பகுதியிலுள்ள தனியார் வங்கியில் இந்த வைப்பு கணக்கு உள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவிக்கின்றார். போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக கிடைக்கப்பெறும் பணம் அந்த வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்படுவதாகவும், அந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத்திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற பணம் வங்கிக்கணக்குகளில் வைப்பிலிடப்படும் பட்சத்தில், அவை நிதி சலவை சட்டத்தின் கீழ் அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த பணத்தின் ஊடாக கொள்வனவு செய்யப்பட்டுள்ள சொத்துகளும் அரசுடமையாக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணைகளின் ஊடாக திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களின் உறுப்பினர்கள் தொடர்பிலான தகவல்களை திரட்ட முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மேலும் தெரிவிக்கின்றார்.
Post a Comment