ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு, எதிராக மனுத்தாக்கலா...?
நாடாளுமன்றத்தை கலைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால், மார்ச் மாதம் 2ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்யக்கோரி, உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளனவென தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் கட்சிகள் சிலவும் சமூக அமைப்புகளுமே, இவ்வாறு மனுத்தாக்கல் செய்யவுள்ளனவென அறியமுடிகின்றது.
தேர்தல்கள் ஆணைக்குழுவால் திகதி குறிக்கப்பட்டுள்ள ஜூன் 20ஆம் திகதியன்று தேர்தலை நடத்தமுடியாத நிலைமையே நாட்டில் ஏற்பட்டுள்ளது.
அரசமைப்பின் பிரகாரம், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, மூன்று மாதங்களுக்கு புதிய அமர்வு கூடப்படவேண்டும். எனினும், தற்போதைய நிலைமையிலான அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.
ஆகையால், பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான உத்தரவை பிறபிக்கும் வகையில், நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்து உத்தரவிடுமாறு கோரியே, மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
இதேவேளை, எக்காரணம் கொண்டும் பழைய நாடாளுமன்றத்தை கூட்டுவதில்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பகிரங்கமாக அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு, சில தரப்புகள் முயற்சிக்கின்றன.
நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பதால், இணையத்தளத்தின் ஊடாக, மனுவைத் தாக்கல் செய்வதற்கு அத்தரப்பு கலந்தாலோசித்து வருகின்றனவென தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment