இது தேர்தல் நடத்த, பொருத்தமான சந்தர்ப்பம் அல்ல - தேசிய பிக்கு முன்னணி
தேர்தலை ஒத்திவைத்து நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு தேசிய பிக்கு முன்னணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுப்பதாக அந்த முன்னணியின் தலைவர் ஹந்துகல ரதனபால தேரர் தெரிவித்துள்ளார்.
தங்காலையில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்கும் போது காணப்பட்ட நிலைமையை விட தற்போது நிலைமை முற்றிலும் மாறுப்பட்டுள்ளது.
சுகாதார துறையினர் தெளிவுப்படுத்தும் விதத்தில், நாடு எதிர்காலத்தில் எப்படியான நிலைமைக்கு மாறும் என்பதை கூற முடியாத சூழலே காணப்படுகிறது.
அரசாங்கம் துரிதமான தேர்தலுக்கு செல்வதற்கு தேவையான சூழலை உருவாக்கி அதற்கான காய்களை நகர்த்துவதை காணக்கூடியதாக உள்ளது.
ஏற்பட்டுள்ள தொற்று நோய் நிலைமையை பயன்படுத்தி தமது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள தயாராகி வரும் விதத்தையே காணமுடிகிறது. இந்த சந்தர்ப்பத்தில் நமக்கு தேர்தல் தேவையா, அதற்கான சூழ்நிலை காணப்படுகிறதா?
சுகாதார துறையினர் கூறுவது போல் நாடு இன்னும் வழமை நிலைமைக்கு திரும்பவில்லை. இப்படியான நிலைமையில் நாடாளுமன்றம் செயலிழந்துள்ளது.
அமைச்சரவையும் ஜனாதிபதியுமே தற்போது செயற்பட்டு வருகின்றனர். இதனால், நாட்டில் பெரிய சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் நிதி தொடர்பான சிக்கலை எதிர்நோக்கி வருகிறது.
பல தீர்மானங்களை எடுக்கும் போது தனித்து தீர்மானங்களை எடுப்பது நாட்டுக்கு நல்ல நிலைமையல்ல. ஜனநாயகம் தொடர்பான புரிதல் இல்லாத காரணத்தினால், சிலர் பல்வேறு கதைகளை கூறுகின்றனர்.
இது தேர்தல் நடத்த பொருத்தமான சந்தர்ப்பம் அல்ல. இதனால், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
நாடாளுமன்றததை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றேன் எனவும் ஹந்துகல ரதனபால தேரர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment