Header Ads



UNP யில் இருந்து விலகும்போது வெளிப்படுத்துவேன் - ஹிருணிக்கா

மத்திய வங்கி முறி தொடர்பான தடவியல் அறிக்கையின்படி யாரும் தண்டிக்கப்படமாட்டார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் மத்தியில் இந்த கருத்தை வெளியிட்ட அவர், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனும், பேர்பேச்சுவல் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் ஆலோசியஸும் பிரதான கட்சிகளின் தலைவர்களின் நண்பர்கள் என்பதே இதற்கான பிரதான காரணம் என்று குறிப்பிட்டார்.

குறித்த கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களுக்காக இவர்கள் இருவரும் பெரும் அளவு நிதிகளை அளித்துள்ளனர். எனவே அவர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள் என்றும் ஹிருணிக்கா தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஸ்ரீகொத்த கூட்டத்தில் பேசப்படும் விடயங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அனுப்பியவர்கள் யார் என்பதை தாம் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி செல்லும் போது வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை தமது தந்தையின் கொலையுடன் சம்பந்தம் கொண்டவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டால் தம் மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்களை சில ஊடகங்கள் நிறுத்திக்கொள்ளும் என்றும் ஹிருணிக்கா நம்பிக்கை வெளியிட்டார்.

No comments

Powered by Blogger.