Header Ads



மொட்டின் கூட்டத்துக்கு சென்ற, யுவதி மீது பாலியல் துஷ்பிரயோகம் - கேகாலையில் அசிங்கம்

- தமிழ்மிரர் -

கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பஸ்ஸில் வீடு திரும்பிக்கொண்டிருந்த யுவதி, அவருடன் பயணித்த இளைஞனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் எம்மாத்தகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியடசர்கள் ருவான் குணசேகர, தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

அத்துடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறித்த யுவதியின் தந்தை வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தனது மனைவியுடன் பிரசார கூட்டத்தில் பங்கேற்க சென்ற மகள், நேற்று (07) இரவு 11 மணிவரை வீடு திரும்பவில்லை என, யுவதியின் தந்தை தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் முன்னெடுத்த விசாரணையின் போது, அரசியல் பிராசார கூட்டத்தில் பங்கேற்று பஸ்ஸில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞனால் குறித்த யுவதி, எம்மாத்தகம, எல்பிட்டிய, பலவத்தக காட்டுப்பகுதியில் பஸ்ஸில் இருந்து இறக்கி அழைத்துச்செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன், சந்தேக நபரான இளைஞன் குறித்த யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் சந்தேக நபரான  எம்மாத்தகம பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக   பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

யுவதியை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த யுவதி விசேட தேவையுடையவர் என தகவல் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.