Header Ads



ஞானசாரர் மீது எந்த, நடவடிக்கையும் இல்லை - பாராளுமன்றத்தில் சீறிப்பாய்ந்தார் சம்பந்தன்

முல்லைத்தீவு- செம்மலை நீராவியடி பிள்ளையார்  ஆலய விடயத்தில்  மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதித்த  கலகொட அத்தே ஞானசார தேரா் மற்றும் சம்பவத்தில் தொடர்புபட்ட  பௌத்த பிக்குகள் மீதும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தவறிய பொலிஸ் அதிகாரிகள் மீதும்  உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  ஆர்.சம்பந்தன்  சபையில் வலியுறுத்தினார்.

சம்பவம் நடந்து இரண்டு வாரங்களாகி விட்டபோதும் அரசு எந்தவிதமான நடவடிக்கைகளையும் சம்பந்தப்படடோருக்கு  எதிராக எடுக்கவில்லையெனவும் சம்பந்தன் சபாநாயகருக்கு சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 27 இன் கீழ் 2 இல் முல்லைத்தீவு- செம்மலை நீராவியடி ஏற்றம் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலய எல்லைக்குள் பௌத்த பிக்குவின் உடல் நீதிமன்ற உத்தரவை அவமதித்து தகனம் செய்யப்பட்டமை தொடர்பில் விசேட கூற்றை முன்வைக்கையிலேயே அவர் இவற்றை  தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 

முல்லைத்தீவு- செம்மலை நீராவியடி ஏற்றம் பகுதியில் உள்ள பிள்ளையார்  ஆலயம் புராதனமிக்கது . அங்கு 2004 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மேதாலங்கார கீா்த்தி என்ற பௌத்த பிக்கு ஒருவரால்  குருகந்த புராண ராஜமகா விகாரை என்ற பெயரில் பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டது. இதன்போது அப்பகுதி மக்கள் அங்கு செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இது தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் விகாரை கட்டும் பணிகள் இடை நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பௌத்த பிக்கு நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பில் மரணமடைந்தார்.அவரது பூதவுடலை முல்லைத்தீவு- செம்மலை நீராவியடி ஏற்றம் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலய காணியில்  தகனம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 இதனால் அப்பகுதி மக்களால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது டன்  நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. அதனை யடுத்து  முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் நீராவியடி பிள்ளையார்ஆலய காணியில் பிக்குவின் உடலை தகனம்  செய்யக் கூடாது என உத்தரவிட்டது. 

இந்நிலையில்  ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு குற்றம் ஒன்றிற்காக சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை பெற்ற கலபட அத்தே ஞானசார தேரர் கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு வந்து நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி அவரது ஆதரவாளர்களுடன் குறித்த இந்து கோயிலுக்கு அருகாமையில் பௌத்த தேரரின் உடலை தகனம் செய்தார்.

எனினும் நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதித்து  செயல்பட்ட அவருக்கு எதிராக அரசாங்கம் இருவாரங்கள கடந்த நிலையிலும்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறித்த பௌத்த தேரரின் இறுதிக் கிரியையின் போது அங்கு சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய பொலிஸ் அதிகாரிகள் அதனை செய்யாமல் மௌனம் காத்தனர்.இந்த செயற்பாடுகளின் போது அங்கு சமூகமளித்திருந்த சட்டத்தரணிகள் கூட தாக்கப்பட்டுள்ளனர்.

அங்கு குழுமியிருந்த பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டவர்களை தடுக்கத் தவறி விட்டனர். இது இந்து மக்களின் உரிமையை மீறும் செயல்.  இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர்  இதன்போது தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.