Header Ads



ஏப்ரல் தாக்குதலை நடத்திய பயங்கரவாத அமைப்பு, தற்போது இலங்கையில் அழிக்கப்பட்டுவிட்டது - ஜனாதிபதி

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாத அமைப்பு தற்போது இலங்கையில் அழிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று நாட்டில் நிலையான அமைதி கட்டியெழுப்பப்பட்டுள்ள நிலையில் தேசிய பாதுகாப்பு குறித்து எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். 

இன்று (05) பிற்பகல் பொலன்னறுவை ஆனந்த பிரிவெனாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிக்குகளுக்கான இரண்டு மாடி தங்குமிட விடுதியை மகா சங்கத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். 

“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் பிரிவெனாக்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின்படி 133 இலட்சம் ரூபா செலவில் இந்த பிக்குகளின் தங்குமிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

கடந்த நான்கரை வருட காலப் பகுதியில் எந்தவொரு காலத்திலும் இல்லாத வகையில் நாட்டில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். 

அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களுடன் அனைத்து மக்களும் தெளிவுடன் வாழக்கூடிய அமைதியான நிலைமை ஒன்று நாட்டில் கட்டியெழுப்பப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் எதிர்பாராத நிலைமை ஒன்று நாட்டில் உருவானபோதும் தற்போது மீண்டும் நாட்டில் அமைதியான சூழல் ஒன்று கட்டியெழுப்பப்பட்டுள்ளதென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். 

இந்த நிலைமைகளுக்கு மத்தியில் இன்று நாட்டில் உள்ள அனைவர் மீதும் உள்ள பொறுப்பு நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை துரிதமாகவும் பலமாகவும் முன்னெடுப்பதாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். 

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து இரண்டு மாடிக் கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள் அதனை பார்வையிட்டார். 

விகாராதிபதி சங்கைக்குரிய மெடேரபிட்டியே சுமங்கல நாயக்க தேரரினால் ஜனாதிபதி அவர்களுக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்று வழங்கிவைக்கப்பட்டது. 

சங்கைக்குரிய உடகம தம்மானந்த தேரர், சங்கைக்குரிய லிந்தகும்புர சோபித தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, மெதிரிகிரிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் சம்பத் ஸ்ரீ நிலந்த உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

1 comment:

  1. ஆனால் ஜனாதிபதியால் இன்னும் அழிக்கவோ,அடக்கவோ முடியாத இனவாதிகல் இன்னும் உள்ளனர்.

    ReplyDelete

Powered by Blogger.