Header Ads



கலிமா சொன்னதற்காக தண்டிக்க நினைப்பது நியாயமா..? கண்ணீர் மல்கிய இஷாக் MP


அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டில் இப்பொலோகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்லஞ்சியாகம அ/கல்லஞ்சியாகம அரபா முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைக்கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் இன்று -13-பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் நடப்பட்டது. 

பாடசாலை அதிபர் எஸ்.எ.நுவைஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இப்பொலோகம பிரதேச சபை உறுப்பினர் நளீம், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் ஊர்மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் இவ்வாறு தெரிவித்தார், 

கலிமா சொன்ன முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக அவசரகால சட்டத்தின் கீழ் நாட்டின் பல பாகங்களிலும் வசிக்கின்ற அப்பாவி முஸ்லிம்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள். முஸ்லிம் பெயர் தாங்கிய ஒரு சில விஷமிகள் செய்த குற்றங்களுக்காக முழு முஸ்லிம் சமுதாயத்தையும் தண்டிக்க நினைப்பது எவ்வாறு நியாயமான செயற்பாடாக அமையும்?

1948 ஆம் ஆண்டு சுதந்திரத்துக்காக போராடிய முஸ்லிம் தலைவர்கள் ஒருபோதும் இனவாதம் பேசவுமில்லை, தனி நாடு கேக்கவுமில்லை, சகல இன மக்களும் ஒற்றுமையாக இந்நாட்டில் வாழ வேண்டும் என்ற ஒரே கோட்பாட்டிலேயே வாழ்ந்து மறைந்தனர். அவ்வழியிலேயே தான் இன்று முழு முஸ்லிம் சமூகமும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. அவ்வாறிருக்க எம் முஸ்லிம் மக்கள் மீது இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்படுவதானது மிகும் வேதனையளிக்கின்றதென கண்ணீர்மல்க கூறினார்.


No comments

Powered by Blogger.