ரணில் கூறினால் களத்தில் குதிப்பேன், ஜனாதிபதி வேட்பாளரில் ரணிலின் பெயரே முதலிடத்தில் உள்ளது - சஜித்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க என்னை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கூறினால் நான் களமிறங்கத் தயாராகவே இருக்கின்றேன் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர்கள் எவரும் போட்டியிடமாட்டார்கள். இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வேட்பாளர் கட்டாயம் களமிறங்குவார். வேட்பாளர் பட்டியலில் ரணில் விக்ரமசிங்கவின் பெயரே முதலிடத்தில் உள்ளது.
அதேவேளை, கட்சியின் பிரதித் தலைவரான எனது பெயரும், சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெயரும் வேட்பாளர் பட்டியலில் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களில் உள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் என்ற விபரத்தை கட்சியின் உயர்பீடம் வெளியிடும்.
எனக்குப் பதவி ஆசை இல்லை. எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க என்னை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கூறினால் நான் களமிறங்கத் தயாராகவே இருக்கின்றேன்.
முன்னாள் ஜனாதிபதியான எனது தந்தை பிரேமதாச இந்த நாட்டுக்குச் செய்த சிறந்த சேவைகளை மக்கள் நன்கு அறிவார்கள். அதன் பிரகாரம் நானும் செயற்படுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment