Header Ads



புத்தர் சிலைகளை உடைத்துவிட்டு, மீண்டும் என்னிடம் வாருங்கள் - சகாக்களுக்கு உத்தரவிட்ட சஹ்ரான்

மாவனெல்லை நகரை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் அடித்து சேதமாக்கப்பட்ட சம்பவங்களானது பயங்கரவாதி சஹ்ரானின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டதாகவும், இதற்காக தன்னுடைய சகாக்களுக்கு வகுப்பெடுத்துவிட்டு, சிலைகளை உடைத்துவிட்டு மீண்டும் என்னிடம் வாருங்கள் என்று குறிப்பிட்டதாகவும், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

மானெல்லைப் பகுதியில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு நேற்று முற்பகல் மாவனெல்லை நீதிவான் உப்புல் ராஜகருணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றத்தில் முக்கியமான தகவல்களை புலனாய்வு அதிகாரிகள் முன்வைத்தனர். அதில், புத்தர் சிலைகளை தகர்க்கும் இந்த செயற்பாடுகள் பயங்கரவாதி சஹ்ரானின் பூரண மேற்பார்வை மற்றும் உத்தரவின் கீழ் இடம்பெற்றுள்ளது.

இந்த விவகாரத்தில் கைதாகி விளக்கமறியலில் உள்ள இப்ராஹீம் மௌலவி என்பவரது வீட்டில் இந்த சிலை உடைப்புக்கான வகுப்புக்கள் சஹ்ரானினால் எடுக்கப்பட்டுள்ளன. வகுப்பின் முடிவில் சிலைகளை உடைத்துவிட்டு நீங்கள் மீண்டும் என்னிடம் வாருங்கள் என சஹ்ரான் அங்கிருந்த தனது சகாக்களுக்கு கூறியுள்ளார்.

இது தொடர்பான சி.ஐ.டி. விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன என்றும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இச் சிலை உடைப்புக்களுடன் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்வதற்காக இருபது இலட்சம் ரூபாவினை சஹ்ரான் கொடுத்துள்ளார். இந்த இருபது இலட்சம் ரூபாவினை இப்ராஹீம் மௌலவி என்பவர் பெற்றுக் கொண்டுள்ளதாக கிடைத்த தகவல்களையடுத்து மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விளக்கமறியலில் உள்ள சந்தேக நபர்கள் 14 பேரையும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை மீள விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் உப்புல் ராஜகருணா, தடுப்புக் காவலில் உள்ள சந்தேக நபர்கள் 20 பேரையும் மீள நான்காம் மாடியில் தடுத்து வைத்து விசாரிக்கவும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி அவர்களை மேற்பார்வைக்காக மீள நீதிமன்றில் ஆஜர் செய்யவும் சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டார்.

இதேவேளை, இந்த விவகார விசாரணைகளின் போது கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை அழிக்க, கேகாலை அதிரடிப்படை கட்டளைத் தளபதிக்கும் இதன்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018 டிசம்பர் 25 ஆம் திகதி அதிகாலை நேரத்தில் குருணாகல் மாவட்டம் பொது ஹர பொலிஸ் பிரிவின் கட்டுபிட்டிய கோணவல பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றில் இந்து கடவுள்களைக் குறிக்கும் உருவச்சிலைகள் அடையாளம் தெரியாதோரால் அடித்து நொறுக்கி சேதமாக்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது கடந்த 2018 டிசம்பர் 26 ஆம் திகதி இதனையொத்த ஒரு சம்பவம் யட்டி நுவர - வெலம்பட பொலிஸ் பிரிவில் பதிவானது.

அதிகாலை 3.00 மணியளவில் வெலம்பட பொலிஸ் பிரிவின் லெயம் கஹவல பகுதியில் மூன்றரை அடி உயரமான புத்தர் சிலை அடையாளம் தெரியாதோரின் தாக்குதலுக்கு உள்ளானது. அத்துடன் அந்த மூன்றரை அடி உயரமான புத்தர் சிலை சேதப்படுத்தப்பட்டிருந்த, அதே நேரம் அதனை அண்டிய பகுதியில் இருந்த மேலும் மூன்று சிறு சிலைகளும் சேதமாக்கப்பட்டிருந்தன.

குறித்த தினத்தில் அதிகாலை 4.00 மணியளவில் மாவனெல்லை திதுருவத்த சந்தியில் உள்ள புத்தர் சிலையும் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் மாவனெல்லை பகுதிகளில் நான்கு இடங்களில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன. அவை இரு பீ அறிக்கைகள் ஊடாக நீதிமன்றுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளன.

மாவனெலெலை - திதுருவத்த சந்தியில் புத்தர் சிலையை தாக்க மோட்டார் சைக்கிளில் இருவர் வந்துள்ளனர். இவ்வாறு வந்ததாக கூறபப்டும் இருவரில் ஒருவரை பிரதேச வாசிகள் துரத்திப் பிடித்து மாவனெல்லை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அன்று முதல் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே தற்போது அவ்விடயத்தில் பல அதிர்ச்சியளிக்கும் விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இந்த சிலை உடைப்பு விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று மாவனெல்லை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே விளக்கமறியலில் உள்ள 14 சந்தேக நபர்கள் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதனைவிட சி.ஐ.டி.யின் பிடியில் இந்த விவகாரம் தொடர்பில் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 சந்தேக நபர்களும் நேற்று விஷேட பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிவானின் மேற்பார்வைக்காக ஆஜர் செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் இதுவரை கைதாகியுள்ள சந்தேக நபர்கள் 34 பேர் என பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.